Published : 13 Mar 2018 09:41 AM
Last Updated : 13 Mar 2018 09:41 AM
இந்த ஆண்டுக்கான முதல் ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் கடந்த 1-ம் தேதி மெக்சிகோவின் குவாடலஜரா நகரில் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெற்ற இந்தத் தொடர் நேற்று நிறைவடைந்தது. 50 நாடுகளைச் சேர்ந்த 404 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 4 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பது இதுவே முதன் முறை. இந்தியா தரப்பில் ரிஸ்வி, மனு பாகர், அகில் ஷியோரன், ஓம் பிரகாஷ் மிதர்வால் ஆகியோர் தங்கப் பதக்கமும், அஞ்சும் மவுத்கில் வெள்ளிப் பதக்கமும், ஜிது ராய், ரவி குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர். கடைசி நாளான நேற்று ஆடவருக்கான ஸ்கீட் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இருமுறை ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவின் வின்சென்ட் ஹன்காக் 60-க்கு 59 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் பால் ஆடம்ஸ் வெள்ளிப் பதக்கமும், இத்தாலியின் தமரா காஸண்ட்ரோ வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர்.
இந்திய வீரர்களான சுமித் சிங் தகுதி சுற்றில் 15-வது இடத்தையும், அங்கத் பஜ்வா 18-வது இடத்தையும், ஷேக் ஷீராஸ் 30-வது இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர். கடைசி நாளில் சோபிக்க தவறினாலும் மகிழ்ச்சியான வகையில் இந்தியா இந்த உலகக் கோப்பை தொடரை நிறைவு செய்துள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT