Published : 07 Mar 2018 07:24 PM
Last Updated : 07 Mar 2018 07:24 PM
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) இன்று வெளியிட்ட புதிய ஊதிய ஒப்பந்த பிரிவில் ஏ+ ஒப்பந்த பிரிவில் கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவன், ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதேசமயம், ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி தொடர்ந்து ஏ பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.
2017 செப்டம்பர் முதல் 2018ம் ஆண்டு செப்டம்பர் வரை இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தத்தை இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுவரை ஏ பி சி ஆகிய 3 பிரிவுகள் மட்டுமே இருந்த நிலையில், புதிதாக இந்த ஆண்டு ஏ+ என்ற பிரிவு உருவாக்கப்பட்டு அதில் 5 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் ஏ+ ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 7கோடி ஊதியமும், ஏ பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், பி பிரிவில் ரூ.3 கோடியும், சி பிரிவில் ஒரு கோடியும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் ஏ+ பிரிவில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவன், வேகப்பந்துவீச்சாளர்கள் புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியம்.
ஏ பிரிவில் எம்.எஸ்.தோனி, அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, முரளி விஜய், புஜாரா, அஜிங்கிய ரகானே, விர்திமான் சாஹா ஆகிய 7 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ. 5 கோடி ஊதியம் அளிக்கப்படும்.
பி பிரிவில் கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியா, இசாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி ஊதியம் கிடைக்கும்.
கேதர் ஜாதவ், மணீஷ் பாண்டே, அக்சர்படேல், கருண் நாயர், சுரேஷ் ரெய்னா, பார்தீவ் படேல், ஜெயந்த் யாதவ் ஆகியோர் சி பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்ஊதியம் தரப்படும். மொகமது ஷமி இதில் எந்தப்பிரிவிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொகமது ஷமி மீது அவர் மனைவி புகார் அளித்துள்ளதால் அவர் இந்த ஒப்பந்தப் பட்டிய்லில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT