Published : 01 Mar 2018 08:36 AM
Last Updated : 01 Mar 2018 08:36 AM
விளையாட்டு துறையில் மிக உயர்வாக கருதப்படும் லாரஸ் விருதை ரோஜர் பெடரர் வென்றார். மேலும் இந்த ஆண்டில் மீண்டு வந்த வீரர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதை கைப்பற்ற ஸ்பெயினின் ரபேல் நடால், ரியல்மாட்ரிட் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் 36 வயதான ரோஜர் பெடரர் தட்டிச் சென்றுள்ளார். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள அவர், கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் ஆஸ்திரேலிய ஓபனில் வாகை சூடியிருந்தார்.
இதனால் கடந்த ஆண்டுக்கான மீண்டு வந்த வீரர் என்ற விருதும் பெடரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இம்முறை லாரஸ் விருதை கைப்பற்றியதன் மூலம் இந்த விருதை அதிக முறை (6) கைப்பற்றிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் ரோஜர் பெடரர். இதற்கு முன்னர் 2005 முதல் 2008-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக லாரஸ் விருதை பெடரர் பெற்றிருந்தார்.
ரோஜர் பெடரர் கூறும்போது, “கடினமான 2016-ம் ஆண்டுக்கு பிறகு களத்துக்கு திரும்பிய நிலையில் இந்த ஆண்டு எனக்கு மறக்க முடியாததாக அமைந்துள்ளது. இந்த விருதுகள் இன்னும் மறக்க முடியாதவையாக அமைந்துள்ளன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT