Published : 02 Mar 2018 03:13 PM
Last Updated : 02 Mar 2018 03:13 PM
மேட்ச் வின்னராக ஜொலிக்க, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, மேற்கிந்தியத்தீவுகள் வீரர் டுவைன் பிராவோ ஆகியோரின் அனுபவ அறிவு எனக்குவேண்டும் என்று இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் உட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் உட் 2018ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் இணையதளத்துக்கு இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் உட் அளித்த பேட்டியில் கூறியதாவது:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக என்னைத் தேர்வு செய்து இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. நெருக்கடியான சூழ்நிலைகளில் நாம் விளையாடும்போதுதான் நாம் அதிகமான விஷயங்களைக் கற்க முடியும். அதிலும் அனுபவ வீரர்களுடன் விளையாடும் போது, நெருக்கடியான நேரத்தில் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைநாம் அவர்களுக்கு அருகே இருந்து பார்த்து கற்க முடியும்.
அதிலும் எங்கள் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியுடனும், மேற்கிந்தியத்தீவுகள் ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோவுடனும் நான் இணைந்து விளையாடுவது எனக்கு கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பாகும். ஒரு மேட்ச் வின்னராக ஜொலிக்க இருவரின் மூளையின் உதவியும் எனக்கு வேண்டும்.
என்னுடைய பந்துவீச்சில் “ஸ்லோபால்” முறையை திருத்தி, அதை வலுப்படுத்தியவர் பிராவோதான். ஐபிஎல் போன்ற மிகப்பெரிய போட்டிகளில், அதிலும் சிறந்த அணியில் இடம் பெற்று விளையாடுவதை யார்தான் விரும்பமாட்டார்கள். நான் மிகப்பெரிய அதிர்ஷ்டக்காரன்.
வேகப்பந்துவீச்சாளர்களைச் சுற்றி எப்போதும் ஒருவிதமான நெருக்கடியும், அழுத்தமும் இருந்து கொண்டே இருக்கும். அதேசமயம், இந்த முறை சிஎஸ்கே அணியில் லிங்கிடி, ஷர்துல் தாக்கூர் இருப்பது எனக்கு பக்கபலமாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT