Published : 08 Mar 2018 08:00 PM
Last Updated : 08 Mar 2018 08:00 PM

கண்ணை மறைத்த ஆத்திரம்: முக்கிய வீரருக்கு தடையால் சிக்கலில் ஆப்கான் அணி

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தகுதிச் சுற்று கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாபவே அணிக்கு எதிராக ஆடிய ஆப்கன் அணியின் விக்கெட் கீப்பர் மொகமத் ஷஜாத் குரூப் பி-யின் மீதமுள்ள இருபோட்டிகளுக்குத் தடை செய்யப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 197 ரன்கள் இலக்கை ஆப்கான் அணி விரட்டியது. அப்போது 3 பவுண்டரிகள் அடித்து ஓரளவுக்கு நிலைபெற்று விட்ட நிலையில் ஷஜாத் 2வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

இன்னிங்சின் 9வது ஓவரில் தெண்டை சடாரா பந்தில் மால்கம் வாலரிடம் கேட்ச் கொடுத்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனால் கடும் ஆத்திரமும் ஏமாற்றமும் அடைந்த ஷஜாத் ஆடுகளத்திற்கு பக்கத்திலிருந்த மற்றொரு ஆட்டக்களத்தில் மட்டையால் ஓங்கி அடிக்க பிட்சில் பள்ளம் ஏற்பட்டது.

இதனையடுத்து ஐசிசி விதிமுறைகளின் படி 24 மாதக்காலத்தில் அவரது தகுதியிழப்புப் புள்ளிகள் 4 ஆக அதிகரித்தது. மேலும் 24 மாத காலத்தில் 2வது தவறான நடத்தை என்பதால் முழு சம்பளத்தையும் இழந்தார்.

இதனையடுத்து 2 சஸ்பென்ஷன் புள்ளிகளைப் பெற்ற அவர் குரூப் பி-யின் கடைசி 2 லீக் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் தங்களது 2 போட்டிகளையும் இழந்த நிலையில் ஷஜாத் தடை அவர்களுக்கு மேலும் 2 போட்டிகளில் வென்று அடுத்த கட்டத்தை எட்டுவதில் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x