Published : 24 Aug 2018 04:40 PM
Last Updated : 24 Aug 2018 04:40 PM

பிசிசிஐ-யின் முழு அதிகாரமும் உச்ச நீதிமன்றம் நியமித்த சிஓஏ கைக்கு மாறியது: மற்றவர்களின் அதிகாரம் முடக்கம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனைத்து அதிகாரங்களும் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் உள்ளிட்டோர் அடங்கிய நிர்வாகக் கமிட்டியின் கைக்கு வந்துள்ளது.

இதனையடுத்து அணித்தேர்வுக்குழு, கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நீங்கலாக மற்றவர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ பொறுப்புத் தலைவர் சி.கே.கண்ணா, செயலர் அமிதாப் சவுத்ரி, பொருளாளர் அனிருத் சவுத்ரி ஆகியோரது அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இனி இவர்கள் சிஓஏ அனுமதி இல்லாமல் எந்த ஒரு நிர்வாக முடிவையும் எடுக்க முடியாது. இதில் இவர்களின் பயணங்களும் அடங்கும்.

பிசிசிஐ புதிய விதிமுறைகள் அடங்கிய சட்டபூர்வமாக்கம் செய்துள்ளதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. புதிய தேர்தல்கள் நடைபெறும் வரை பிசிசிஐ-யின் அன்றாட நிர்வாகத்தினை சி.இ.ஓ. ராகுல் ஜோஹ்ரி தலைமையிலான குழு கவனிக்கும் என்று சிஓஏ கூறியுள்ளது.

சிஓஏவின் சேர்மன் முன்னாள் இந்திய தணிக்கைக் குழு தலைவர் வினோத்ராய் ஆவார். இதில் முன்னாள் இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டன் டயானா எடுல்ஜி ஆகியோர் உள்ளனர்.

புதிய விதிமுறைகளின் படி பிசிசிஐ நிர்வாகத்தினை உயர்மட்ட குழுவே கவனிக்கும். இந்த உயர்மட்ட குழுவில் 5 அலுவல் அதிகாரிகள் உட்பட 9 பேர் நிர்வாகிகளாக இருப்பார்கள். இதில் பிசிசிஐ உறுப்பினர்கள் தேர்வு செய்யும் ஒருவரும் வீரர்கள் அமைப்புத் தேர்வு செய்யும் இருவரும், இந்திய தலைமைத் தணிக்கை அலுவலகத்திலிருந்து ஒரு அதிகாரியும் இந்த நிர்வாகக்கவுன்சிலில் இருப்பார்கள்.

அடுத்த தேர்தல் வரும் வரை உயர்மட்ட குழுவின் பணிகளையும் ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவின் பணிகளையும் சி.ஓ.ஏ. செய்யும்.

அணித்தேர்வு நடைமுறைகள் போன்றவற்றில் மாற்றங்கள் இல்லை, ஆனால் எந்த ஒரு நிர்வாக ரீதியான முடிவுகளுக்கும் இனி சிஓஏ அனுமதி இருந்தால்தான் முடியும்.

மேலும், “பிசிசிஐ அலுவல் அதிகாரிகள், அல்லது அவர்களது செயல் உதவியாளர்கள் யாருமோ, பிசிசிஐ பணியாளர்களோ சிஓஏ அனுமதி இல்லாமல் பிசிசிஐ செலவில் இனி வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது” என்றார் வினோத்ராய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x