Last Updated : 03 May, 2018 09:17 PM

 

Published : 03 May 2018 09:17 PM
Last Updated : 03 May 2018 09:17 PM

கவுண்டி அணியுடன் ஒப்பந்தத்தில் விராட் கோலி கையொப்பம்: ஆப்கன் டெஸ்டில் விளையாடுவது சந்தேகம்

 

இங்கிலாந்து கவுண்டியில் உள்ள சர்ரே அணியுடன் விளையாட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் செய்துள்ளார்.

இங்கிலாந்துக்கு ஆகஸ்ட் மாதம் செல்லும் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அங்குள்ள ஆடுகளம், பந்துவீச்சு ஆகியவற்றுக்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக்கொள்ளும் வகையில்கவுண்டி அணியில் விளையாட கோலி ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதுநாள் வரை எந்த கவுண்டி அணியில் சேர்ந்து கோலி விளையாடப் போகிறார் என்ற ரகசியம் காக்கப்பட்டுவந்தநிலயில் இன்று இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் மாதம் மட்டும் எங்கள் அணியில் விராட் கோலி இணைந்து விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விராட் கோலி கூறுகையில், நீண்ட காலமாக கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்து வந்தது. எனக்கு இந்த வாய்ப்பு அளித்த சர்ரே அணி நிர்வாகத்துக்கும், அலெக் ஸ்டூவர்டுக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

சர்ரே அணியின் இயக்குநர் அலெக்ஸ் ஸ்டூவர்ட் கூறுகையில், இந்தியாவின் மிகப்பெரிய வீரர் எங்கள் அணியில் இணைந்து விளையாடுவது பெருமையாக இருக்கிறது. ஜூன் மாதம் முழுவதும் சர்ரே அணிக்காக விராட் கோலி விளயாட இருப்பது இளம் வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கும். அதிகமான விஷயங்களை கற்றுக்கொள்வார்கள். இங்கிலாந்தின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கும், வளரும் வீரர்களுக்கும் கோலியின் வருகை உத்வேகத்தை அளிக்கும் எனத் தெரிவித்தார்.

இதன்படி ஜூன் மாதம் சர்ரே அணியின் இணைந்து கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளார் கோலி. இதன் காரணமாக ஜூன் மாதம் 14 முதல் 18-ம் தேதி வரை பெங்களூரில் இந்திய, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் கோலி பங்கேற்மாட்டார் என்று உறுதியாகியுள்ளது.

இந்திய வீரர்கள் ஏற்கனவே 3 பேர் கவுண்டி அணியில் விளையாடி வரும் நிலையில், 4-வது வீரராக கோலி இணைகிறார். யார்க்சையர் அணியில் சட்டீஸ்வர் புஜாராவும், சசெக்ஸ் அணியில் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மாவும் சசெக்ஸ் அணியிலும், வருண் ஆரோன் லீசெஸ்டெர்சையர் அணியிலும் விளையாடி வருகின்றனர். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து அக்சர் படேல் துர்ஹாம் அணிக்காக விளையாடலாம்.

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2014-ம்ஆண்டு டெஸ்ட் தொடரி்ல இடம் பெற்றிருந்த கோலி மிகமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுபோன்று இந்த முறையும் ஏற்பட்டுவிடக்கூடாது, அணிக்கு தலைமை ஏற்று செல்கிறோம் என்பதால், முன் கூட்டியே தயாராகும் வகையில் கவுண்டி அணியில் விராட் கோலி விளையாடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x