Last Updated : 23 Apr, 2018 08:49 PM

 

Published : 23 Apr 2018 08:49 PM
Last Updated : 23 Apr 2018 08:49 PM

பிரமிக்க வைத்த போல்ட்டின் கேட்சை முறியடிக்கும் கேட்சை எடுப்பேன்: புகழாரத்துடன் ஏ.பி.டிவில்லியர்ஸ் உறுதி

ஆர்சிபி அணிக்காக அன்று டெல்லி டேர் டெவில்ஸ் அணியை புரட்டி எடுத்த ஏ.பி.டிவில்லியர்ஸ் இதே போட்டியில் முக்கியக் கட்டத்தில் விராட் கோலியை வெளியேற்ற பவுண்டரி அருகே இன்னமும் கூட நம்ப முடியாத பிரமிக்க வைத்த கேட்சைப் பிடித்த டிரெண்ட் போல்ட்டின் முயற்சியை முறியடிக்கும் கேட்சுக்குச் செல்வேன் என்று கூறுகிறார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.

பீல்டிங்கைப் பற்றி முதன் முதலில் ஒரு வீரர் பேசுகிறார், அதுவும் அந்தக் கேட்சை முறியடிப்பேன் என்று கூறும் ஒரு ஆளுமை ஏ.பி.டிவில்லியர்ஸைத் தவிர வேறு ஒருவரும் இருக்க முடியாது.

முன்பெல்லாம் 2019 உலகக்கோப்பையை வெல்வதே தன் அடுத்த இலக்கு, கனவு என்று கூறி வந்த ஏ.பி.டிவில்லியர்ஸ் தற்போது அப்படிப்பட்ட ஒரு அழுத்த தேவையற்றது என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார்.

ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக பெரிய இன்னிங்ஸை ஆடிய ஏ.பி.டிவில்லியர்ஸ் இன்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறியதாவது:

“இப்போதைக்கு, ஒரு சமயத்தில் ஒரு போட்டியை மட்டுமே யோசிக்கிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவுக்காக சிறப்பாக ஆட வேண்டும் என்று விரும்புகிறேன். உலகக்கோப்பையை வெல்வதென்பது என் உடனடிக் கனவல்ல. இது குறித்து என் மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளேன். உலகக்கோப்பையை நாங்கள் (தெ.ஆ) வென்றால் அது போனஸ், வெல்லவில்லையா அது என் கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு போதும் பாதிக்காது.

(ஆர்சிபி பேட்டிங் விராட் கோலி, டிவில்லியர்ஸை நம்பியுள்ளது) நானும் இத்தகைய கோட்பாட்டை கேட்டு வருகிறேன். ஓவ்வொரு அணியிலுமே டாப் 4-ல் சர்வதேச வீரர்கள் உள்ளனர். அவர்களுக்கும் அழுத்தம் உண்டு. நானோ, விராட்டோ கூடுதல் அழுத்தத்தை உணரவில்லை.

மேட்ச் வின்னர்கள் கொண்ட அணி எங்களுடையது, சுமையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்.

சீசன் இல்லாத தருணங்களில் ஹென்றிக் கிளாசனிடம் சிலபல டிப்ஸ்களை கேட்டுப் பெறுகிறேன். என் பேட்டிங்கில் அவரது யோசனைகளைப் பயன்படுத்த முயற்சி செய்கிறேன். 14 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் ஆடியிருந்தாலும் சில வேளைகளில் அடிப்படைகளை மறந்து விடுகிறோம். என்னுடைய கிரிக்கெட் ஆட்டம் 5-10 அடிப்படை கிரிக்கெட் கொள்கைகளைக் கொண்டது. சில வேளைகளில் ரன்கள் வராத போது அடிப்படைகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.

டிரெண்ட் போல்ட் பிடித்த கேட்ச் இந்தத் தொடரின் மிகச்சிறந்த கேட்ச், யாரும் அதை பீட் செய்ய முடியாது. ஆனால் நான் அந்தக் கேட்சை பீட் செய்ய முயற்சி செய்வேன். அது சாதாரண கேட்ச் அல்ல, வலைப்பயிற்சியில் அப்படிப்பட்ட கேட்ச்களை நாங்கள் எடுப்பதும் இல்லை அதற்கு பயிற்சியும் செய்வதில்லை. ஆயிரத்தில் ஒன்று வகை கேட்ச் ஆகும். அது ஆட்டத்தின் போக்கையே அவர்கள் பக்கம் மாற்றியிருக்கும். எனது அனைத்து கால சிறந்த கேட்ச்களின் டாப் 10 பட்டியலில் டிரெண்ட் போல்ட் கேட்ச் எப்போதும் இருக்கும்.

கேப்டனாக இருப்பவர் நன்றாக ஆடாத போதுதான் ஒரு கேப்டனைப் பற்றிய் உண்மையான தீர்ப்பு கூற முடியும். ஏனெனில் பேட்டிங்கிலோ, பவுலிங்கிலோ கேப்டனாக இருப்பவர் சொதப்பலாம் ஆனால் அணியை தலைமையில் சிறந்த வழிமுறையில் நடத்திச் சென்றால் அவர் சிறந்த கேப்டன் தான். விராட் கோலி எங்களுக்கு அருமையான கேப்டனாக இருக்கிறார். வரும் போட்டிகளில் கோலி நிறைய ரன்களைக் குவிக்கப்போகிறார். அவரால் அப்படி ரன்களைக் குவிக்க முடியாவிட்டாலும் அவர் தலைமைத்துவம் நன்றாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும்.”

இவ்வாறு கூறினார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x