Published : 18 Apr 2024 07:07 AM
Last Updated : 18 Apr 2024 07:07 AM

பஞ்சாப் கிங்ஸுடன் இன்று மோதல்: வெற்றிப் பாதைக்கு திரும்புமா மும்பை இந்தியன்ஸ் அணி?

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள்

முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில்இன்று இரவு 7.30 மணிக்கு முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை தடுமாறி வருகிறது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள மும்பை இந்தியன்ஸ் 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. இந்த சீசனை ஹாட்ரிக் தோல்விகளுடன் தொடங்கிய மும்பை அணி அதன் பின்னர் டெல்லி கேபிடல்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளை தோற்கடித்தது.

கடைசியாக நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.

கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பார்ம் கவலைக்குரியதாக உள்ளது.ஆல்ரவுண்டரான அவர், பந்து வீச்சில் ஓவருக்கு சராசரியாக 12 ரன்களை விட்டுக்கொடுப்பது பலவீனமாக உள்ளது. இதேபோன்று 9 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள ஜெரால்டு கோட்ஸி, 4 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள ஆகாஷ் மத்வால் ஆகியோர் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் தாரை வார்ப்பவர்களாக உள்ளனர். மேலும் பேட்டிங்கிலும் ஹர்திக் பாண்டியாவிடம் இருந்து முக்கியமான கட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான செயல்திறன் வெளிப்படவில்லை.

அதே நேரத்தில் ஹர்திக் பாண்டியா இந்த சீசனில் இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் பல்வேறு மைதானங்களில் விரோதமான சூழல்களை எதிர்கொண்டார். இதுவும் அவரது செயல் திறனில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவே கருதப்படுகிறது.

எனினும் தொழில்முறை கிரிக்கெட்டில் இவற்றை கடந்து சாதிப்பதற்கான வழிகளை ஹர்திக் பாண்டியா விரைவில் கண்டறிய வேண்டிய நிலையில் உள்ளார். இது ஒருபுறம் இருக்க வலுவான சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது அணியின் பந்து வீச்சை மேலும் பலவீனப்படுத்தி உள்ளது.

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசிய ரோஹித் சர்மாவிடம் இருந்து மேலும் ஒரு உயர்மட்ட செயல் திறன் வெளிப்படக்கூடும். இஷான் கிஷனும் தாக்குதல் ஆட்டம் தொடுப்பது பலம் சேர்ப்பதாக உள்ளது.

சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் டக் அவுட் ஆன சூர்யகுமார் யாதவ் மீண்டும் மட்டையை சுழற்றுவதில் கவனம் செலுத்தக்கூடும். கடந்த இரு ஆட்டங்களாக முக்கியமான கட்டத்தில் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறும் திலக் வர்மா பொறுப்புடன் செயல்படுவதில் முனைப்பு காட்டக்கூடும்.

பஞ்சாப் கிங்ஸ் அணியும் 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது. 4 புள்ளிகள் பெற்று உள்ள அந்த அணி நிகர ரன் ரேட் அடிப்படையில் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

கேப்டன் ஷிகர் தவண் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் இன்றைய ஆட்டத்திலும் சேம் கரண் பஞ்சாப் அணியை வழிநடத்தக்கூடும். பின்வரிசையில் களமிறங்கும் ஷசாங் சிங், அஷுதோஷ் சர்மா ஆகியோரை நம்பியே பேட்டிங் உள்ளது. டாப் ஆர்டரில் ஜானி பேர்ஸ்டோ பார்மின்றி தவிப்பது பலவீனமாக உள்ளது.

அவருடன், 6 ஆட்டத்தில் 119 ரன்கள் சேர்த்துள்ள பிரப்ஷிம்ரன் சிங், 106 ரன்கள் சேர்த்துள்ள ஜிதேஷ் சர்மா ஆகியோரும் தடுமாறி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க பந்து வீச்சில் சேம் கரண், காகிசோ ரபாடா ஆகியோர் மட்டுமே ஓரளவு நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர்.

அர்ஷ்தீப் சிங், ஹர்ஷால் படேல் ஆகியோருக்கு எதிராக பேட்ஸ்மேன்கள் எளிதாக குறிவைத்து தாக்குதல் ஆட்டம் தொடுப்பது ஒட்டுமொத்த பந்து வீச்சு துறையையும் பலவீனப்படுத்துவதாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x