Published : 13 Apr 2024 06:53 AM
Last Updated : 13 Apr 2024 06:53 AM

பஞ்சாப் - ராஜஸ்தான் இன்று மோதல் @ ஐபிஎல்

முலான்பூர்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் கடைசி பந்தில் தோல்வி அடைந்ததால் தொடர்ச்சியாக 5-வது வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தவறவிட்டிருந்தது. 19-வது ஓவரை வீசிய குல்தீப் சென், 20-வது ஓவரை வீசிய அவேஷ் கான் ஆகியோர் கூட்டாக 12 பந்துகளில் 35 ரன்களை தாரை வார்த்தது தோல்விக்கு முதன்மையான காரணமாக அமைந்தது.

அந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த டிரெண்ட் போல்டுக்கு 2 ஓவர்கள் மீதம் இருந்தது. பவர்பிளேவில் அவர், 2 ஓவர்களை வீசி 8 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். பொதுவாக ஐபிஎல் தொடர்களில் டிரெண்ட் போல்ட் பவர் பிளேவில்தான் அதிகம் பயன்டுத்தப்படுவார்.

எனினும் அனுபவத்தை கருத்தில் கொண்டு இறுதிக்கட்ட ஓவர்களில் அவரை, சஞ்சு சாம்சன் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால்அதை சாம்சன் செய்யத் தவறினார்.இதற்கான பலனை அணி அனுபவித்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் களவியூகம் மற்றும் திட்டங்களை செயல்படுத்தல் பகுதியில் ராஜஸ்தான் அணி கூடுதல் கவனத்துடன் செயல்படக்கூடும்.

ஷிகர் தவண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. டாப் ஆர்டர் பேட்டிங்கில் ஷிகர் தவண், ஜானி பேர்ஸ்டோ, பிரப்ஷிம்ரன் சிங் ஆகியோர் பார்மின்றி தவிக்கின்றனர். ஒரு சில ஆட்டங்களில் பேட்டிங்கில் நம்பிக்கை அளித்த சேம் கரணிடம் இருந்து தொடர்ச்சியான செயல் திறன் வெளிப்படவில்லை. காயம் அடைந்த லியாம் லிவிங்ஸ்டனுக்கு பதிலாக களமிறங்கிய சிக்கந்தர் ராஸாவிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டை வீச்சு வெளிவரவில்லை.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிதேஷ் சர்மாவும் ரன்கள் சேர்க்க தடுமாறுகிறார் இதனால் இறுதிக்கட்ட ஓவர்களில் ஷசாங்க் சிங், அஷுதோஷ் சர்மா ஆகியோரது அதிரடி ஆட்டத்தை நம்பியே இருக்க வேண்டியது உள்ளது. இந்த ஜோடி குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி தேடிக்கொடுத்த நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்து வரை போராடி 2 ரன்களில் வெற்றியை தவறவிட்டது. ஒது ஒருபுறம் இருக்க கடந்த 3 ஆட்டங்களிலும் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் எதிரணிகளை முறையே 199, 199 மற்றும் 182 ரன்களை எடுக்க அனுமதித்தனர். எனினும் கடந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்களை வீழ்த்தி பார்முக்கு திரும்பி இருப்பது நம்பிக்கை அளிக்கக்கூடும்.

இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் 26 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் ராஜஸ்தான் 15 ஆட்டங்களிலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க ஆட்டங்களில் அதிரடியாக வெற்றிகளை குவிப்பதையும் அதன் பின்னர் ஒரு தோல்வியை சந்தித்தால் அங்கிருந்து சரிவை நோக்கி பயணிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளது. இம்முறை இதற்கு அந்த அணி தீர்வு காணும் வகையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவதில் தீவிர முனைப்பு காட்டக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x