Published : 13 Apr 2024 06:50 AM
Last Updated : 13 Apr 2024 06:50 AM

பந்து வீச்சில் பலம் இல்லாததால் பேட்டிங்கில் அதிக ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்: ஆர்சிபி கேப்டன் டு பிளெஸ்ஸிஸ்

மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி.197 ரன்கள் இலக்கை துரத்தியமும்பை இந்தியன்ஸ் 27 பந்துகளை மீதம் வைத்து 15.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில், 52 ரன்களையும் இஷான் கிஷன் 34 பந்துகளில் 69 ரன்களையும் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தனர். இவர்களுக்கு உறுதுணையாக விளையாடிய ரோஹித்சர்மா 38 ரன்கள் சேர்த்தார். ஹர்திக் பாண்டியா 6 பந்துகளில் 21 ரன்களும், திலக் வர்மா 10 பந்துகளில் 16 ரன்களும் சேர்த்தனர். மும்பை அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 5 ஆட்டங்களில் விளையாடி உள்ளஅந்த அணி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. அதேவேளையில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது 6-வது ஆட்டத்தில் 5-வது தோல்வியை சந்தித்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் கூறியதாவது:

பேட்டிங் கண்ணோட்டத்தில் பார்த்தால் நாங்கள் 200 ரன்களுக்கு மேல் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பந்து வீச்சில் எங்களிடம் அதிக ஆயுதங்கள் இல்லை. இதனால் பேட்டிங்கை சார்ந்தே இருக்கவேண்டும். பந்து வீச்சு கண்ணோட்டத்தில் பார்த்தால் விவேகமுடன் செயல்படுவதில் நாங்கள் தேக்கம் அடைந்துவிட்டோம். பவர்பிளேவுக்குள் 2 அல்லது 3 விக்கெட்களை வீழ்த்தியிருக்க வேண்டும். எப்போதுமே 4 ஓவர்களுக்குப் பிறகு நாங்கள் பின்தங்கி இருப்பது போன்ற உணர்வே எப்போதும் உள்ளது.

தோல்வியை ஜீரணிப்பது கடினமாக உள்ளது. ஆடுகளம் ஈரப்பதமாக இருந்தது. டாஸை வென்றிருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும். இருப்பினும் மும்பைஅணி விளையாடிய விதத்தைபாராட்ட வேண்டும். அவர்கள், எங்கள் பந்து வீச்சாளர்களை தவறுகள் செய்ய வைத்தனர். மும்பை அணியில் களமிறங்கிய அனைவருமே அபாரமாக விளையாடினார்கள். பனிப்பொழிவு முக்கிய பங்காற்றும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். இதனால் 215 முதல் 220 ரன்கள் தேவையாக இருந்தது. 197 ரன்கள் போதாது. சில மைதானங்களில் இது பெரிய விஷயம். பனிப்பொழிவு செட்டில் ஆனதும் ஆட்டம் கடினமாக மாறியது. இவ்வாறு டு பிளெஸ்ஸிஸ் கூறினார்.

பும்ராவுக்கு பாராட்டு: ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங்கின் போது இறுதிக்கட்ட ஓவர்களில் அந்த அணியின் ரன் குவிப்பை மும்பை இந்தியன்ஸ் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாரளான ஜஸ்பிரீத் பும்ரா வெகுவாக கட்டுப்படுத்தியதுடன் விக்கெட் வேட்டையும் நிகழ்த்தினார். 4 ஓவர்களை வீசிய அவர், 21 ரன்களை வழங்கி 5 விக்கெட்கள் வீழ்த்தினார். பும்ரா குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் கூறும்போது, “நாங்கள் மும்பை அணிக்கு அழுத்தம் கொடுத்தோம். ஆனால் பும்ரா எல்லாவற்றையும் மாற்றினார். சிறந்த பவுன்ஸர்கள், வேகம் குறைந்த பந்துகள் என அனைத்தையும் வீசுகிறார். டி 20 கிரிக்கெட்டில் மலிங்கா போன்றவர்கள் சிறந்து விளங்கினார்கள். ஆனால் அந்த பெயரை பும்ரா எடுத்துக் கொண்டுள்ளார்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x