Published : 06 Apr 2024 06:35 AM
Last Updated : 06 Apr 2024 06:35 AM

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இன்று மோதல்: வெற்றிப் பாதைக்கு திரும்புமா பெங்களூரு?

கோப்புப்படம்

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி4 ஆட்டங்களில் விளையாடி 3 தோல்வி, ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று 10 அணிகள் கலந்து கொண்டுள்ள தொடரில் 8-வது இடத்தில் உள்ளது. முன்னணி பேட்ஸ்மேன்களான டு பிளெஸ்ஸிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ரஜத் பட்டிதார் ஆகியோர் அதிரடியாக விளையாடும் திறன் கொண்டவர்கள். ஆனால் இதுவரை இவர்கள் தனித்தோ, ஒருங்கிணைந்தோ பெரிய அளவிலான செயல் திறனை வெளிப்படுத்தவில்லை.

விராட் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடி வருகிறார். அவர், 2 அரைசதங்களுடன் 203 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆட்டத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளரிடம் விரைவிலேயே ஆட்டமிழந்த விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் மீண்டும் மட்டையை சுழற்றுவதில் தீவிரம் காட்டக்கூடும். லக்னோ அணிக்கு எதிராக 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ஆட்டத்தில் ரஜத் பட்டிதார் ஓரளவு சிறப்பாக விளையாடினார். எனினும் நடுவரிசையை பலப்படுத்த வேண்டுமானால் அவர், இன்னும் விவேகம் காட்ட வேண்டும்.

பெங்களூரு அணியின் பந்து வீச்சும் வலுவானதாக இல்லை. இடது கை வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள், சுழற்பந்து வீச்சாளர் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 4 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளனர். ஆனால், இவர்கள் எந்த ஒரு ஆட்டத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. அனுபவம் வாய்ந்த முகமது சிராஜ் பார்மின்றி தடுமாறுவது ஒட்டுமொத்த பந்து வீச்சையும் பலவீனப்படுத்தி உள்ளது. கடந்த ஆட்டத்தில் அல்சாரி ஜோசப்புக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட ரீஸ் டாப்லி ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் வழங்கினார். இது அணியை மேலும் பலவீனப்படுத்தியது. வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டுமானால் இன்றைய ஆட்டத்தில் அனைத்து துறையிலும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மேம்பட்ட திறனை வெளிப்படுத்த வேண்டும்.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி உள்ள 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. ஒரு அரை சதத்துடன் 109 ரன்கள் சேர்த்துள்ள சஞ்சு சாம்சன், 2 அரை சதங்களுடன் 181 ரன்கள் விளாசியுள்ள ரியான் பராக் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ளனர்.

அதேவேளையில் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜாஸ்பட்லர் ரன்கள் சேர்க்க தடுமாறி வருகின்றனர். ஜெய்ஸ்வால், 3 ஆட்டங்களில் 39 ரன்களே சேர்த்துள்ளார்.அதேவேளையில் ஜாஸ் பட்லர் 35 ரன்களே எடுத்துள்ளார். இவர்கள் பார்முக்கு திரும்பினால் அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும்.

பந்து வீச்சில் டிரெண்ட் போல்ட், நந்த்ரே பர்கர், யுவேந்திர சாஹல் கூட்டணி பெங்களூரு பேட்டிங் வரிசைக்குஅழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். இவர்கள் 3 பேரும் நடப்பு சீசனில் கூட்டாக 16 விக்கெட்களை கைப்பற்றி உள்ளனர். ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே மோசமான பார்மில் உள்ளார். அவர், 3 ஆட்டங்களில் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி உள்ளார். ஓவருக்கு சராசரியாக 8.3 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். எனினும் அனுபவம் வாய்ந்த அஸ்வின் விரைவில் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x