Published : 24 Apr 2018 04:46 PM
Last Updated : 24 Apr 2018 04:46 PM
ஐபிஎல் திருவிழா முடிந்த பிறகு ‘உண்மையான’ கிரிக்கெட்டுக்குத் திரும்பும் இந்திய அணி இங்கிலாந்தில் வெற்றி பெற்று, ஆஸ்திரேலியாவையும் அங்கு வீழ்த்தும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் உறுதியாக நம்புகிறார்.
போரியா மஜும்தாரின் Eleven Gods and A Billion Indians என்ற புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது, அதில் கலந்து கொண்ட மைக்கேல் கிளார்க் கூறியதாவது:
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முழு உடற்தகுதியுடைய வீரர்களுடன் களமிறங்கினால் அது நம்ப முடியாத அளவுக்கு சிறப்பான தொடராக அமையும். ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பேங்க்ராப்டை ஆஸ்திரேலியா இழந்தது அந்த அணிக்கு பெரும் பின்னடைவுதான். ஆனால் அதனால்தான் இந்தியா அங்கு வெல்லும் என்று நினைப்பதை வெறுக்கிறேன்.
இங்கிலாந்திலும் இந்தியா வெற்றி பெற பெரிய வாய்ப்பு கூடிவந்துள்ளது. இங்கிலாந்தை இங்கிலாந்தில் இந்திய அணி வீழ்த்தி விட்டால், அதன் பிறகு அதே நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியா சென்று வெல்லும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் சமீபமாக நடந்த விஷயங்களினால் பெரும் நெருக்கடியில் உள்ளது.
மறுகட்டுமானத்தை விரைவில் உருவாக்கி வெல்லும் வழிகளுக்கு அந்த அணி திரும்ப பாடுபட வேண்டியுள்ளது. ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியாவில் இந்திய அணி ஒரு போதும் டெஸ்ட் தொடரில் வென்றதில்லை என்பதைப் பார்க்கும் போது அது ஒரு மிகப்பெரிய சுவாரசிய தொடராக அமையும்.
இவ்வாறு கூறினார் கிளார்க்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கிளார்க் கூறியதை வழிமொழிந்த போது, “முன்னமேயே இங்கிலாந்துக்குச் சென்று சில போட்டிகளில் ஆடுவதால் எதிரணியினருக்கு சவால் அளிக்க முடியும். ஜூலை 1ம் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது ஆகஸ்ட் 1ம் தேதிதான் முதல் டெஸ்ட் ஆகவே டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சூழலின் அனுபவத்தைப் பெற நிறைய கால அவகாசம் உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT