Published : 01 Apr 2024 06:59 AM
Last Updated : 01 Apr 2024 06:59 AM

துல்லியமாக பந்து வீசியதற்கு கிடைத்த வெற்றி: லக்னோ வீரர் மயங்க் யாதவ் கருத்து

மயங்க் யாதவ்

லக்னோ: துல்லியமாக பந்து வீசியதற்கு கிடைத்த பலனாக பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றோம் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் மயங்க் யாதவ் கூறினார்.

லக்னோவிலுள்ள ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் இகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் லக்னோ வீரர்மயங்க் யாதவ் 4 ஓவர்கள் பந்துவீசி 27 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்களைக் கைப்பற்றினார். வெற்றி குறித்து லக்னோ அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் கூறியதாவது:

இந்த ஆட்டத்தை நாங்கள் அற்புதமாக தொடங்கினோம். சொந்த மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் வெற்றி பெற்றது மகிழ்ச்சிஅளித்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பு வெற்றி வியூகம் குறித்து வீரர்களுடன் பேசினோம்.

இன்றைய ஆட்டம் எங்கள் அணி வீரர் மயங்க் யாதவின் தினமாக அமைந்தது. அவர் வேகமாக மட்டுமல்லாமல், துல்லியமாகவும் பந்துவீசி அசர வைக்கிறார். அவரது பந்துவீச்சின் மூலம் கிரிக்கெட் உலகுக்கு தன்னை யார் என்று தெரிய வைத்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகச் சிறந்த மேடையாக உள்ளது. இதன்மூலம் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் திறமை வெளியுலகுக்குத் தெரிகிறது. ஒவ்வொரு போட்டியும் உங்களுக்கு நல்ல வாய்ப்பு. உங்களின் திறமையை வெளியே கொண்டு வருவதற்கான சிறப்பான தருணமாக இது உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மயங்க் யாதவ் கூறியதாவது: ஐபிஎல் போட்டியில் எனது அறிமுகம் இப்படிச் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கவில்லை. முதல் போட்டியிலேயே 3 விக்கெட்கள் வீழ்த்தினேன். துல்லியமாக பந்து வீசியதால் பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் வெற்றி கண்டோம். இந்தப் போட்டிக்கு முன்னதாக நான்பதற்றமாக இருந்தேன். ஸ்டம்புகளை குறிவைத்து வேகமாக பந்துவீசினேன்.

முதலில் மெதுவான வேகத்தில் பந்துவீச முயற்சி செய்தேன். பின்னர் வேகமாக வீச முடிவு செய்தேன். பேர்ஸ்டோவின் விக்கெட்டை எடுத்தது மிகவும் சிறப்பானது. கிரிக்கெட் போட்டியில் சிறிய வயதிலேயே அறிமுகமாவது சிறப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x