Published : 04 Feb 2024 04:42 PM
Last Updated : 04 Feb 2024 04:42 PM

IND vs ENG 2-வது டெஸ்ட் | ஷுப்மன் கில் சதம் விளாசல் - இங்கிலாந்துக்கு 399 ரன்கள் இலக்கு

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி.

விசாகப்பட்டினத்தில் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. அதன்படி, முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. கைவசம் 4 விக்கெட்கள் இருக்க நேற்று 2-வது நாள்ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது இந்திய அணி. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ஜெய்ஸ்வால் தனது முதல் டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார். 209 ரன்களில் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டை பறிகொடுக்க, இதன்பின் வந்தவர்கள் விரைவாகவே விக்கெட்டை இழந்தனர். இதனால், 112 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 396 ரன்கள் குவித்தது.

இதனிடையே, முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணியை தனது அச்சுறுத்தல் பவுலிங் மூலம் சுருட்டினார் இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா. இங்கிலாந்து அணி தரப்பில் ஜாக் கிராவ்லி 76 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 47 ரன்கள் தவிர மற்ற வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறினர். இதனால், 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்த இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 143 ரன்கள் பின்தங்கியது. பும்ரா மொத்தமாக ஆறு விக்கெட்களை கைப்பற்றினார்.

இதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஜெய்ஸ்வால் இணை சுமாரான துவக்கமே கொடுத்தது. 13 ரன்களில் ரோஹித் விக்கெட்டாக, ஜெய்ஸ்வால் 17 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் 30 ரன்களுக்குள் இந்திய அணி இரண்டு விக்கெட்களை இழந்தது. இதன்பின் வந்தவர்களில் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினார். அவருக்கு அக்சர் படேல் உறுதுணையாக இருந்தார். கடந்த சில போட்டிகளாக சிறப்பாக விளையாடாத ஷுப்மன் கில் இந்த இன்னிங்ஸில் இங்கிலாந்தின் பந்துவீச்சை சிறப்பாக சமாளித்து அதிரடி சதம் விளாசினார். 147 பந்துகளில் 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 104 ரன்கள் எடுத்து விக்கெட்டானர். அக்சர் படேல் 45 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

மற்றவர்களில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் அஸ்வின் தலா 29 ரன்கள் எடுத்தனர். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி. இங்கிலாந்து அணி தரப்பில் டாம் ஹார்ட்லி 4 விக்கெட், ரெஹான் அகமது 3 விக்கெட், ஆண்டர்சன் 2 விக்கெட் வீழ்த்தினர்.

டெஸ்டின் 3ம் நாள் ஆட்டம் முடிவில், 2வது இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது இங்கிலாந்து அணி. 332 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை நான்காம் நாள் ஆட்டம் நடக்கவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x