Published : 14 Jan 2018 09:39 AM
Last Updated : 14 Jan 2018 09:39 AM
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் மீது புகார் தெரிவித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) கடிதம் எழுதியுள்ளேன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அஸாருதீன் கூறினார்.
ஹைதராபாத் கிரிக்கெட் சங்க சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கடந்த வாரம் ஹைதராபாதில் நடைபெற்றது. அப்போது கூட்டத்துக்கு வந்த முகமது அஸாருதீனை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர். அவரை கூட்ட அரங்குக்குள் அனுமதிக்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் அவரைக் காக்க வைத்த அதிகாரிகள் பின்னர் அவரை அனுமதித்தனர்.
இதுதொடர்பாக பிசிசிஐ-யில் புகார் செய்து கடிதம் எழுதியுள்ளதாக அஸாருதீன் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “என் மீது ஹைதராபாத் கிரிக்கெட் சங்க (எச்சிஏ) நிர்வாகிகள் கூறும் புகார்கள் அனைத்தும் பொய்யானவை.
என் மீது எந்தக் குற்றமும் இல்லை. நான் ஹைதராபாத் கிரிக்கெட் கிளப்பின் துணைத் தலைவராக உள்ளேன். நான் கூட்டத்துக்கு செல்ல முயன்றபோது, என் பெயர் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர்.
தேசிய கிரிக்கெட் கிளப்பின் துணை தலைவராக நான் இருக்கிறேன். அதற்கான கடிதமும் என்னிடம் இருக்கிறது. அந்தக் கடிதத்தை ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவரும் அங்கீகரித்துள்ளார். இவ்வாறு இருக்க அவர்கள் ஏன் என்னை அனுமதிக்கவில்லை என்று தெரியவில்லை. இது முழுக்க முழுக்க பிசிசிஐ-யின் தவறுதான். இதில் என்னுடைய தவறு ஏதும் இல்லை. இதுதொடர்பாக புகார் தெரிவித்து பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
நான் ஒரு சர்வதேச வீரர். பிசிசிஐ என்னை அங்கீகரித்துள்ளது. எனக்குப் பாராட்டு விழாவை 2005-ல் பிசிசிஐ நடத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி என் மீது எந்தத் தடையும் இல்லை. நிலைமை இவ்வாறு இருக்க எனக்கு ஏன் அனுமதி வழங்கப்படவில்லை?
ஹைதராபாத் கிரிக்கெட் சங்க வளர்ச்சி குறித்தும் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராயை சந்தித்துப் பேசவுள்ளேன்.
ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்துக்கு புதிதாதக தேர்தல் நடத்தவேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT