Published : 01 Dec 2023 07:28 PM
Last Updated : 01 Dec 2023 07:28 PM

தனியார் அமைப்பு நடத்தும் ஃபார்முலா 4 பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஃபார்முலா 4 பந்தயத்தை நடத்தாதபோது, தனியார் அமைப்பு நடத்தும் பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? பந்தயம் நடத்துவதால் அரசு ஈட்டும் வருமானம் குறித்த விவரங்கள் உள்ளனவா? ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதா?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் வரும்டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்தப்படுகிறது. பந்தயம் தீவுத் திடலில் தொடங்கி ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடலில் முடிவடையும். இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவில் முதல் முறையாக இரவுப் போட்டியாக சாலைகள் வழியாக நடத்தப்படுகின்ற மிகப் பெரிய மோட்டார் ரேஸ் இதுவாகும். இந்த சிறப்புமிக்க இரண்டு சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா மற்றும் வெளிநாடுக ளிலிருந்து ஆண் மற்றும் பெண் ஓட்டுநர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கார் பந்யத்துக்கு தடை விதிக்கக் கோரி, மருத்துவர் ஸ்ரீஹரிஷ், லூயிஸ் ராஜ், டிஎன்பிஎஸ்சி முன்னாள் உறுப்பினர் பாலுசாமி ஆகியோர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் பந்தயம் நடத்தப்படவுள்ளது. 250 கிலோமீட்டர் வேகத்தில் கார்கள் செல்லும்போது 130 டெசிபல் ஒலி மாசு ஏற்படும். இது சிகிச்சை பெறுபவர்களை பாதிக்கும். ராணுவம், துறைமுகம், கடற்படை ஆகியவற்றின் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் . சென்னை பெருநகர வளரர்ச்சி குழும நிதியை கார் பந்தயத்துக்கு பயன்படுத்தவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச அளவிலான பந்தய தடம் இருக்கும் நிலையில், சென்னை மாநகரில் எந்த பகுதியிலும் இந்த கார் பந்தயத்தை நடத்தக் கூடாது எனவும், இந்த பந்தயத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுக்களில் கோரியிருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "பந்தயத்தை நடத்தும் தனியார் நிறுவனத்துக்காக தடுப்பு சுவர்கள் அகற்றப்பட்டு, நல்ல சாலைகளை மறு சீரமைப்பதற்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் வீதி கார் பந்தயங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன. இருங்காட்டுக்கோட்டையில் சர்வதேச தரத்திலான பந்தயத்தடம் உள்ள நிலையிலும் நகரின் மத்தியில் இந்த பந்தயம் நடத்தப்படுகிறது.

மேலும், விளையாட்டுத்துறை அமைச்சரின் ஆர்வத்தில் தொடங்கிய எண்ணத்துக்கு, முதல்வர் அனுமதி அளித்துள்ளார். கோடிக்கணக்கில் அரசு நிதி ஒதுக்கியுள்ள நிலையில், பந்தயத்தின் மூலம் வரும் வருமானம் அனைத்தும் தனியார் நிறுவனத்துக்கு செல்கிறது. பந்தயத்தை நடத்தும் தனியார் அமைப்பு குறைந்த அளவே முதலீடு செய்துள்ள நிலையில், பந்தயத்தில் அசம்பாவிதம் நடந்தால் மருத்துவ செலவுகளை யார் ஏற்பது? என்பதில் கேள்வி எழுவதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த பந்தயத்துக்காக மரங்களும் வெட்டப்படுவதாக மனுதாரர் குற்றச்சாட்டை முன்வைத்தபோது, இதற்கு ஆதாரங்கள் ஏதும் உள்ளதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அரசு தரப்பில், “ஒரு மரம் கூட வெட்டவில்லை. அவ்வாறு வெட்டியதாக புகார் வந்தால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்கும். மேலும், துறைமுகம் மற்றும் கடலோர காவல்படை அலுவலகங்கள் அருகில் இல்லை. ராணுவ அலுவலகங்களுக்கு செல்ல இடையூறு இல்லாத வழி அமைக்கப்பட்டுள்ளது. பந்தய தடத்துக்கான சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. பந்தய வழித்தடத்தின் அருகே குடியிருப்பு ஏதும் இல்லை. என்றும், பந்தய நாட்களில் பொதுமக்கள் யாரும் அதை பயன்படுத்த போவதில்லை” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பந்தயத்தை நடத்தாதபோது, தனியார் அமைப்பு நடத்தும் பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? பந்தயம் நடத்துவதால் அரசு ஈட்டும் வருமானம் குறித்த விவரங்கள் உள்ளனவா? ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதா?” என கேள்விகளை எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில், “ஐபிஎல் போட்டி நடத்தப்படும் நடைமுறையில் தான் இந்த கார் பந்தயமும் நடத்தப்படுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.கார் பந்தயத்தை நடத்தும் நிறுவனம், ஏற்கெனவே ஹைதராபாத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் பந்தயம் நடத்தியுள்ளது. பந்தய வீரர்கள் மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கும் சேர்த்து பொது காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பாண்கள், கட்டமைப்பு, காப்பீடு என 200 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது” என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசுக்கும், பந்தய ஏற்பாட்டாளர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x