Published : 15 Nov 2023 08:11 PM
Last Updated : 15 Nov 2023 08:11 PM

“இது ஒரு கடினமான முடிவு” - பாகிஸ்தான் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அஸம் விலகல்

இஸ்லாமாபாத்: நடப்பு உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகளிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதைத் தொடர்ந்து டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று ஃபார்மெட்டுகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் பாபர் அஸம்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “2019-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை வழிநடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து (PCB) எனக்கு அழைப்பு வந்த தருணம் தெளிவாக நினைவிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் களத்திலும் சரி, வெளியிலும் சரி பல ஏற்ற, இறக்கங்களை அனுபவித்திருக்கிறேன். கிரிக்கெட் உலகில் பாகிஸ்தானின் பெருமையையும், மரியாதையையும் நிலை நிறுத்த வேண்டும் என்பதை முழுமனதுடன் நோக்கமாக கொண்டிருந்தேன்.

சக வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகத்தின் கூட்டு முயற்சியால் ஒயிட்பால் ஃபார்மெட் கிரிக்கெட் போட்டிகளில் நம்பர் 1 இடத்தை எட்டினேன். எனது இந்தப் பயணத்தில் உறுதுணையாக இருந்து ஆதரவளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றிலிருந்து மூன்று ஃபார்மெட் போட்டிகளிலிருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். இது ஒரு கடினமான முடிவு தான். ஆனால், இந்த முடிவை எடுக்க இதுவே சரியான தருணம் என நினைக்கிறேன். தொடர்ந்து மூன்று வடிவ போட்டிகளிலும் பாகிஸ்தானுக்காக அர்ப்பணிப்புடன் விளையாடுவேன். இந்த முக்கியமான பொறுப்பை என்னிடம் ஒப்படைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x