Published : 15 Nov 2023 06:00 PM
Last Updated : 15 Nov 2023 06:00 PM

ODI WC 2023 | கோலி, ஸ்ரேயஸ் அபார சதம்: அரையிறுதியில் நியூஸி.க்கு 398 ரன்கள் இலக்கு

மும்பை: நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதியில் இந்திய அணி 397 ரன்கள் குவித்துள்ளது. இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் சதம் அடித்து அசத்தினர்.

உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நியூஸிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ரோகித் - ஷுப்மன் கில் கூட்டணி ஓப்பனிங் செய்தது. போல்ட்டின் முதல் பந்தே 2 ரன்கள் விளாசிய ரோகித், முதல் ஓவரில் மட்டும் இரண்டு பவுண்டரிகளுடன் 10 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து தனக்கே உரிய பாணியில் புல் ஷாட் சிக்ஸர்கள் , பவுண்டரிகள் என அதிரடி காட்டிய ரோகித் காரணமாக இந்திய அணி 5 ஓவர்களில் 47 ரன்கள் குவித்தது.

விரைவாக அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9வது ஓவரில் டிம் சவுதியின் பந்துவீச்சில் 47 ரன்களுக்கு விக்கெட்டானார். இதையடுத்து, விராட் கோலி களம்புகுந்தார். ரோகித் சென்ற பின் ஷுப்மன் கில் மட்டையை சுழற்றினார். இதனால், 12.2 ஓவர்களில் ஷுப்மன் கில் சிக்ஸர் அடிக்க இந்திய அணி 100 ரன்களை எட்டியது. இதற்கு அடுத்த ஓவரில் ஷுப்மன் கில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். கில்லின் 13வது ஒருநாள் அரைசதம் இதுவாகும்.

தொடர்ந்து இருவரும் நிதானமாக விளையாடிய நிலையில், 79 ரன்கள் எடுத்திருந்தபோது ஷுப்மன் கில் தசைப்பிடிப்பு காரணமாக பாதிக்கப்பட்டார். அவரை அணியின் பிசியோ சோதித்து பார்த்தார். பின்னர் ரிட்டையர் ஹர்ட் முறையில் விளையாடாமல் பெவிலியன் திரும்பினார் கில். அவருக்கு பதிலாக ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார்.

சச்சின் சாதனை முறியடிப்பு: கில் சென்ற பிறகு விராட் கோலி பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். 60 பந்துகளை சந்தித்த கோலி, 4 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். 14 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 114 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 29வது ஓவரில் இந்திய அணி 200 ரன்களை கடந்தது. தொடர்ந்து கோலியுடன் ஸ்ரேயஸ் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருவரும் 7 ரன் ரேட் என்பதை குறையாமல் பார்த்துக்கொண்டனர். ஸ்ரேயஸ் அரைசதம் பதிவு செய்தார்.

அதேநேரம், சதத்தை நோக்கி முன்னேறிய விராட் எதிர்பார்த்தபடி, வரலாற்று சதம் அடித்து அசத்தினார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்து 50வது சதம் அடித்தார் விராட் கோலி. 106 பந்துகளை சந்தித்த கோலி, 8 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார். இதன்பின் 117 ரன்களில் டிம் சவுதியின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி அவுட் ஆனார்.

கோலியின் விக்கெட்டுக்கு பின் ஸ்ரேயஸ் ஆட்டத்தை கவனித்துக்கொண்டார். அவரும் சில நிமிடங்களில் சதம் அடித்து அசத்தினார். 67 பந்துகளில் 3 பவுண்டரி, 8 சிக்ஸர்களுடன் ஸ்ரேயஸ் சதம் பதிவுசெய்த நிலையில் 105 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் சூர்யகுமார் யாதவ் வந்த வேகத்தில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து திரும்பினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து அணிக்கு 398 என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் 39 ரன்களும், ரிடையர் ஹர்ட் ஆகி திரும்ப வந்த ஷுப்மன் கில் 80 ரன்கள் எடுத்தும் இறுதி ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட் வீழ்த்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x