Published : 28 Oct 2023 04:22 PM
Last Updated : 28 Oct 2023 04:22 PM

ஆசிய பாரா விளையாட்டு | ''அதிக நிதி ஒதுக்கியதே பதக்க வேட்டைக்குக் காரணம்'' - அனுராக் தாக்குர்

அனுராக் தாக்குர் | கோப்புப் படம்

புதுடெல்லி: ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா முன் எப்போதும் இல்லாத அளவு 111 பதக்கங்களை வென்றதற்கு, விளையாட்டுத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதே காரணம் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர், "ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பது இலக்காக இருந்தபோது, அது எவ்வாறு சாத்தியமாகும் என பலரும் தெரிவித்தனர். கடந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் 70 பதக்கங்களையும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 72 பதக்கங்களையும் வென்றிருந்தோம். இம்முறை, இரண்டு போட்டிகளிலுமே 100 பதக்கங்களை கடந்துள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி அரசின் கொள்கையே இதற்குக் காரணம். விளையாடு இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். விளையாட்டுத் துறைக்கு மூன்று மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. இதன் காரணமாகவே, இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டார்.

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 111 பதக்கங்களைப் பெற்று இந்தியா 5-வது இடம் பிடித்துள்ளது. 214 தங்கம், 167 வெள்ளி, 140 வெண்கலம் என 521 பதக்கங்களுடன் சீனா முதலிடம் பிடித்துள்ளது. 44 தங்கம், 46 வெள்ளி, 41 வெண்கலம் என 131 பதக்கங்களுடன் ஈரான் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 42 தங்கம், 49 வெள்ளி, 59 வெண்கலம் என 150 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடம் பிடித்துள்ளது. 30 தங்கம், 33 வெள்ளி, 40 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் கொரியா நான்கம் இடம் பிடித்துள்ளது. 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என 111 பதக்கங்களுடன் இந்தியா ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நிறைந்த சர்வதேச போட்டிகளில் 111 பதக்கங்களை இந்தியா வென்றது இதுவே முதல்முறை. கடந்த 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில்கூட இந்தியா 101 பதக்கங்கள் மட்டுமே வென்றது. 2010-ம் ஆண்டு சீனாவின் கான்சோ நகரில் நடைபெற்ற முதல் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஒரு தங்கம் உள்பட 14 பதக்கங்களை மட்டுமே பெற்று 15வது இடம் பிடித்தது. ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இதற்கு முன் கடந்த 2018-ம் ஆண்டு 15 தங்கம் உள்பட 72 பதக்கங்களை வென்றதே அதிகபட்ச பதக்க வேட்டையாக இருந்தது.

"இம்முறை வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாரா விளையாட்டு வீரர்கள் நமது நாட்டை பெருமை கொள்ள வைத்திருக்கிறார்கள். டோக்கியோ பாராலிம்பிக்கில் வென்றதை விட அதிக பதக்கங்களை பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் வெல்வோம். 111 பதக்கங்களை வென்றது எங்களுக்கு ஆச்சரியம் அல்ல. 110-115 பதக்கங்களை வெல்ல முடியும் என நாங்கள் எதிர்பார்த்திருந்தோம். தற்போது 111 என்ற ராசியான எண் கொண்ட பதக்கங்களை வென்றுள்ளோம்" என பாராலிம்பிக் கமிட்டியின் தலைவர் தீபா மாலிக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x