Published : 03 Jan 2018 07:50 PM
Last Updated : 03 Jan 2018 07:50 PM

புதிய பந்தை இந்திய வீரர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பதே தீர்மானிக்கும்: இந்திய அணிக்கு சச்சின் டிப்ஸ்

18 வயது முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடி வந்த சச்சின், தென் ஆப்பிரிக்கா மண்ணிலும் சாதித்தவர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா தொடர் குறித்து சச்சின் தனது சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 1992-2011 வரை 25 டெஸ்ட் போட்டிகளில் 45 இன்னிங்ஸ்களில் 1741 ரன்களை அடித்துள்ளார், அதிகபட்ச ஸ்கோர் 169 ஆகும். இதில் 7 சதங்கள் 5 அரைசதங்கல் அடங்கும். சராசரி 42.46. தென் ஆப்பிரிக்க மண்ணில் 15 போட்டிகள் 28 இன்னிங்ஸ்களில் 1161 ரன்களை 46.44 என்ற சராசரியில் 5 சதங்கள் 3 அரைசதங்களுடன் சச்சின் எடுத்துள்ளார். 7 சதங்களில் தென் ஆப்பிரிக்க மண்ணில் 5 சதங்கள், இதில் 169 அதிகபட்ச ஸ்கோர், இது மிகவும் சிறந்த இன்னிங்ஸ், ஆலன் டோனல்ட் பந்து வீச்சைப் பதம் பார்த்த மிகவும் ஆக்ரோஷமான ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆலன் டோனல்ட், கிறிஸ் பிரிங்கிள், பிரையன் மெக்மில்லன், கிரெக் மேத்யூஸ், ஃபானி டிவில்லியர்ஸ், ஷான் போலாக், மகாயா நிடினி, டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் ஆகிய சிறந்தப் பந்து வீச்சை எதிர்கொண்டவர் சச்சின் டெண்டுல்கர்.

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

முதன் முதலாக தென் ஆப்பிரிக்கா சென்ற போது அவர்கள் கிரிக்கெட் ஆடும் தீவிரம் எங்களுக்குப் புதிதாக இருந்தது, பயிற்சி ஆட்டத்தில் அவர்கள் காட்டிய தீவிரம் எங்களை ஆச்சரியப்படுத்தியது. இது எங்கள் கண்களைத் திறந்தது. இவர்களது 2-ம் மட்ட 3-ம் மட்ட அணிகளே கூட பயங்கரத் திறமைகள் கொண்டது. பல வழிகளில் போட்டி மனப்பான்மை கொண்ட ஒரு அணியாகும் அது.

மிகச்சிறந்த பீல்டர் ஜாண்ட்டி ரோட்சை உருவாக்கிய அணி, ஆல்ரவுண்டர்களில் பிரையன் மெக்மில்லன் தொடங்கி ஜாக் காலிஸ் வரை மிகவும் சிறந்த வீரர்களை உருவாக்கியது தென் ஆப்பிரிக்க அணி. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாட்டிலும் நீண்ட காலத்துக்கு அசைக்க முடியாத அணியாகத் திகழும் ஒரு அணி என்றால் அது தென் ஆப்பிரிக்காதான்.

பந்து வீச்சில் புதிய பந்தில் டேல் ஸ்டெய்ன் மிகச்சிறந்தவர், அதே போல் வெர்னன் பிலாண்டர் அபாயகரமான வீச்சாளர். இந்திய அணியின் ஆட்டம் புதிய பந்தை எப்படி சமாளிக்கப்போகின்றனர் என்பதைப் பொறுத்தே அமையும். புதிய பந்தை நன்றாக ஆடிவிட்டால், நிச்சயம் ஒரு நல்ல ஸ்கோரை எட்ட முடியும். இவை எல்லாவற்றையும் விட முதல் நாள் ஆட்டத்தில் எப்படி சோபிக்கிறோம் என்பதைப் பொறுத்தே தொடர் அமையும்.

வேகப்பந்து வீச்சு ஆட்டக்களங்களை இங்கு அமைத்து ஆடினாலும் தென் ஆப்பிரிக்காவில் ஆடுவது என்பது வேறு விஷயம். காரணம் இங்கு எஸ்ஜி பந்து ரிவர்ஸ் ஆகும்போது அபாயகரமாக இருக்கும், ஆனால் அங்கெல்லாம் முதல் 25-40 ஓவர்கள் தாக்குப் பிடிக்க வேண்டும். இதுதான் தென் ஆப்பிரிக்கா போன்ற அயல்நாடுகளில் துணைக் கண்ட அணிகள் சந்திக்கும் சவாலாகும்.

முதலில் கட்டுக்கோப்பு, இது முக்கியம். பிறகு கால்நகர்த்தல் இது முழுக்க மனதைப் பொறுத்தது, மனம் சுதந்திரமாக இருந்தால் கால்களும் சுதந்திரமாக நகரும். என்ன மன நிலையில் இறங்குகிறோம் என்பது முக்கியம். உள்ளுணர்வு முடிவு செய்ய வேண்டும், எதை ஆடுவது எதை விடுவது என்பதை.

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நெருக்கமாகச் செல்லும் பந்துகளை எதிர்கொள்வதில் ஒரு ரகசியம் உள்ளது. ஒரு நல்ல பேட்ஸ்மென் தன் கைகளை உடலுக்கு நெருக்கமாக வைத்து ஆடுவார், ஆனால் அந்த நெருக்கத்தை உடைக்க நல்ல பவுலர் முயற்சி செய்வார். பந்துக்கு நெருக்கமாக மட்டையைக் கொண்டு செல்லும் போது கால்கள் பந்தின் திசைக்கு ஏற்ப நகராமல் இருந்தால் கஷ்டம்.

அங்கு வேகத்தை சமாளிக்க முடியாது என்பதெல்லா ஒன்றுமில்லை, நான் சேவாக், கங்குலி, லஷ்மண், ராகுல் திராவிட் ஆகியோருடன் ஆடியுள்ளேன். அனைவருமே தரமான வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ரன்கள் எடுத்துள்ளோம், அதனால் அது ஒரு பிரச்சினையல்ல.

இவ்வாறு கூறினார் சச்சின் டெண்டுல்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x