Published : 10 Oct 2023 07:11 AM
Last Updated : 10 Oct 2023 07:11 AM

ODI WC 2023 | இந்தியா - பாக். போட்டிக்கு 11 ஆயிரம் பேர் பாதுகாப்பு

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா

அகமதாபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டிக்கு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

13-வது ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் வரும் 14-ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்த மைதானத்தில் சுமார் 1.30 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம். கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் ஏற்கெனவே விற்று தீர்ந்துள்ளன.

இந்நிலையில் இந்த போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் நேற்று காந்தி நகரில் ஆலோசனை நடத்தினார். இதில் மாநில உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவி, மாநில போலீஸ் டிஜிபி விகாஸ் சஹாய், அகமதாபாத் காவல் துறை ஆணையர் ஜி.எஸ்.மாலிக் மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அகமதாபாத் காவல் துறை ஆணையர் ஜி.எஸ்.மாலிக் கூறியதாவது:

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் பூபேந்திர படேல் ஆய்வு செய்துள்ளார். கிரிக்கெட் போட்டியின் போது எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு காவல்துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மைதானத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் நடமாட்டம் இருக்கும். சமீபத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் 7,000 காவல் துறையினர், 4 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள்.

7,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினருடன், மைதானத்தைப் பாதுகாக்கவும், போட்டியின் போது நகரின் பதற்றமான பகுதிகளில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும் கிட்டத்தட்ட 4,000 ஊர்க்காவல் படையினரை பணியில் ஈடுபடுத்த உள்ளோம். இவர்கள் தவிர, என்.எஸ்.ஜி.,யின் மூன்று 'ஹிட் டீம்'களையும், ஒரு ட்ரோன் குழுவையும் பாதுகாப்பு பணியில் பயன்படுத்த உள்ளோம். எங்கள் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படையின் ஒன்பது குழுக்களும் பாதுகாப்பு பணியில் பயன்படுத்தப்படுவார்கள்.

ஐ.ஜி. மற்றும் டி.ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள நான்கு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் 21 துணை போலீஸ் கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் போட்டி நாளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை மேற்பார்வையிட்டு வழிகாட்டுவார்கள். மாநில ஆயுதப் படை போலீஸாரின் 13 கம்பெனிகளைத் தவிர, 3 கம்பெனி விரைவு அதிரடிப் படை போலீஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளோம். இவ்வாறு ஜி.எஸ்.மாலிக் கூறினார்.

கடந்த வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து மும்பை போலீஸாருக்கு மின்னஞ்சல் வந்திருந்தது. அதில், பிரதமர் மோடியும், அகமதாபாத்தில் உள்ள விளையாட்டு மைதானமும் குண்டுவைத்து அழிக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறையில் உள்ள கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயை விடுவிக்க வேண்டும். கூடவே ரூ.500 கோடி தர வேண்டும் என்று அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் மோத உள்ள கிரிக்கெட் போட்டிக்கு அதிக அளவிலான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x