Published : 31 Dec 2017 12:40 PM
Last Updated : 31 Dec 2017 12:40 PM

ஏ.பி.டிவில்லியர்ஸ் ஆட்டத்தை மதிக்கிறேன், அவரை வீழ்த்துவதே முக்கியம்: விராட் கோலி

இந்தியா-தென் ஆப்பிரிக்கா தொடரில் ஒரு சுவாரசியமான விஷயம் விராட் கோலி, ஏ.பி.டிவிலியர்ஸ் இடையேயான பேட்டிங் போட்டி. டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் திரும்பியுள்ள டிவில்லியர்ஸை வீழ்த்துவதே முக்கியம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

“ஏ.பி. என்னுடைய மிகப்பெரிய நண்பர், அவர் விளையாடும் விதத்தை பெரிதும் மதிக்கிறேன். ஒரு மனிதராகவும் அவர் மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது.

எனவே ஒருவரையொருவர் எதிர்த்து ஆடும்போது இருவருமே வரம்பு மீற மாட்டோம். நாங்கள் எங்கள் இருவரிடையே அப்படி நடந்து கொள்ளவே முடியாது, வாய்ப்பேயில்லை, எங்களால் முடியாது. ஆனால் ஏபி-யை வீழ்த்த வேண்டும் என்பதே முக்கியம்.

எதிரணியினரும் என்னையும், புஜாராவையும், ரஹானேயையும் அப்படித்தான் கருதுவார்கள் என்று நினைக்கிறேன்.

ஒவ்வொருவருமே இந்தத் தொடரில் தனித்துவ வீரராகத் திகழ வேண்டும் என்று விரும்புவர். ஒரு அணியாகத் திரண்டு ஆடி பங்களிப்பு செய்யவில்லையெனில் வெற்றி விளையாது, தொடரை வெல்ல நிறைய வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இப்போது நம் அணியில் ஒவ்வொருவரிடமும் காணப்படும் தீரா அவா, வாய்ப்புக்காக அவர்களை காத்திருக்க வைத்துள்ளது. வெற்றிக்காக காத்திருக்கின்றனர், இது உற்சாகம் தரும் ஒரு விஷயம்.

எதிரணி பற்றி நான் பேச முடியாது, டிவில்லியர்ஸ் நீண்ட இடைவேளைக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறார். வெளியில் இந்தத் தொடரைப் பற்றி காரசாரமாக என்ன எழுதினாலும் பேசினாலும் எந்த அணி நன்றாக ஆடுகிறதோ அந்த அணியே வெற்றி பெறும்” என்றார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x