Last Updated : 15 Dec, 2017 06:49 PM

 

Published : 15 Dec 2017 06:49 PM
Last Updated : 15 Dec 2017 06:49 PM

தைரியம், வித்தியாசத்தின் கலவை ஷ்ரேயஸ் ஐயர்

மும்பையிலிருந்து வந்திருக்கும் இன்னொரு தைரியமான, வித்தியாசமான அணுகுமுறை கொண்ட பேட்ஸ்மென் ஷ்ரேயஸ் ஐயர் என்று கிரிக்கெட் வட்டாரங்களில் இவர் பெயர் விதந்தோதப்பட்டு வருகிறது.

ரோஹித் சர்மாவின் ஆக்ரோஷ இன்னிங்ஸ் ஊடேயே தானும் அடித்து ஆடி இலங்கைக்கு எதிராக மொஹாலியில் ஆக்ரோஷ காட்டிய ஷ்ரேயஸ் ஐயர், பிரவீண் ஆம்ரேவின் மாணவர்.

“இந்தியாவுக்கு நீ ஆடிய பிறகுதான் நான் உன் வீட்டுக்கு வருவேன்” என்று தான் ஷ்ரேயாசிடம் கூறியதாக பிரவீண் ஆம்ரே கூறுகிறார்.

10 வயதாக இருக்கும் போது சிவாஜி பார்க் மைதானத்தில் தனக்கும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று பிரவீண் ஆம்ரேவிடம் ஷ்ரேயஸ் கேட்ட போது, 26வது வீரராக சேர்க்க விரும்பவில்லை என்று ஆம்ரே மறுதலித்துள்ளார்.

ஓராண்டுக்குப் பிறகு ஆம்ரேவிடம் சேர்ந்தார் இன்று நமக்கு ஆக்ரோஷமான, தைரியமான, வித்தியாசமான ஒரு வீர்ராக ஷ்ரேயஸ் ஐயர் கிடைத்துள்ளார். இலங்கைக்கு எதிராக அன்று 88 ரன்களை எடுத்ததை இவரது சக தோழர்களான ஷர்துல் தாக்கூர், சிதேஷ் லாத் ஆகியோர் கொண்டாடியிருப்பார்கள்.

முதல்தர கிரிக்கெட்:

மும்பை அணி 2014-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் அணியிடம் தோல்வி அடைந்த போது மும்பை அணிக்கு அறிமுகமான ஐயர் 7-ம் நிலையில் இறங்கி 7 மற்றும் 1 என்று ஆட்டமிழந்து சோகத்தில் ஆழ்ந்தார். அப்போது, “நான் ஷ்ரேயஸை ஆதரித்தேன், காரணம், இவர் சாதாரண வீரர் அல்ல என்பதே” என்றார் பிரவீண் ஆம்ரே. ஆனால் அந்த சீசனில் 809 ரன்களையும் அதற்கு அடுத்த சீசனில் 1321 ரன்களையும் குவித்தார் ஷ்ரேயஸ். எந்த மும்பை வீரரும் ஒரு சீசனில் இவ்வளவு ரன்களை எடுத்ததில்லை.

மும்பை வளர்ப்புத்தான், ஆனால் இவர் வித்தியாசமானவர், தலையைத் தொங்கப் போட்டு ஒன், டூ, த்ரீ, ஃபோர் என்று காபி புக் ஸ்டைலில் மிட் ஆன், மிட் ஆஃப் என்று V-யில் ஆடுபவர் அல்ல. மாறாக ஆதிக்கம் செலுத்த விரும்பவர், முதல் பந்திலிருந்தே கிராஸ்பேட் போடத் தயங்காதவர். ஆம்ரே இதனை ஆமோதித்து, “அவர் நமக்கு வெற்றிகளைப் பெற்று தருபவர், காரணம், தான் கிரீசிற்கு புதிது என்பதாலேயே தளர்வான பந்தை தடுத்தாடும் குணம் இல்லை, அடித்துதான் ஆடுவார். என்னை பொறுத்தவரை அவர் கிரிக்கெட் நேர்மறை பேட்ஸ்மனல்ல, பேட்டிங் உத்தி விதிகளை மீறி ஆடக்கூடியவர். ஆனால் திறமையானவர்” என்றார்.

திருப்பு முனை:

2015 ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலை ரூ.10 லட்சத்திலிருந்த ஷ்ரேயஸ், டெல்லி டேர் டெவில்ஸ் அணியினால் 2.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார், பிரவீண் ஆம்ரேதான் பயிற்சியாளர். அந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷ்ரேயஸ் ஐயர் வளரும் வீரர் விருதைப் பெற்றார்.

இந்தியா ஏ அணிக்காக ஆஸ்திரேலியா அணியுடன் இங்கு ஆடிய போது இரட்டைச் சதத்தை விரைவில் எடுத்தார் ஷ்ரேயஸ். இதனால் தரம்சலாவில் 14 வீரர்கள் பட்டியலில் இந்திய அணியில் இடம்பெற்றார்.

சமீபத்தில் ரஞ்சி டிராபி போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை சிறப்பாக ஆடியதற்காக புகழப்பட்டிருக்கிறார் ஷ்ரேயஸ் ஐயர்.

விரைவில் இவரை டெஸ்ட் அணிக்குள் நுழைத்து, அயல்நாட்டுத் தொடர்களில் வாய்ப்பளித்து இவரது திறமை வளர்ந்திட இந்திய அணி நிர்வாகம் உதவிட வேண்டியது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x