Last Updated : 05 Aug, 2023 08:01 AM

 

Published : 05 Aug 2023 08:01 AM
Last Updated : 05 Aug 2023 08:01 AM

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி | ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தை போராடி டிரா செய்தது இந்தியா

சென்னை: 7-வது ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் நேற்று 19-வது இடத்தில் உள்ள ஜப்பானுடன் மோதியது. தொடக்க நிமிடங்களில் இந்திய அணிக்கு 3 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவற்றை இந்திய அணி வீரர்கள் கோல்களாக மாற்றத் தவறினர். 7-வது நிமிடத்தில் அமித்ரோஹிதாஸின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. அடுத்த நிமிடத்தில் ஜப்பான் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணி வாய்ப்பை வீணடித்தது.

9-வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங், மன்தீப் சிங் கூட்டணி அமைத்து பந்தை வேகமாக இலக்கை நோக்கி கடத்தி சென்றனர். ஆனால் வட்டத்தின் விளிம்பு பகுதியில் ஜப்பான் வீரர்களால் இடைமறிக்கப்பட்டது. 11-வது நிமிடத்தில் ஹர்திக் சிங், கார்த்தி செல்வம் வட்டத்துக்குள் பந்தை விரைவாக கடத்திச் சென்றனர். ஆனால் அதை பெற அங்கு இந்திய வீரர்கள் யாரும் இல்லை. 13-வது நிமிடத்தில் ஹர்திக், குர்ஜாந்த், செல்வம் கார்த்தி கூட்டணி தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டது. ஆனால் அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை. 14-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பையும் இந்திய அணி தவறவிட்டது. முதல் கால்பதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

17-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கோல் அடிக்க அடுத்தடுத்து இரு வாய்ப்புகள் கிடைத்தன. இதில் சுமித் இலக்கை நோக்கி அடித்த பந்தை ஜப்பான் கோல்கீப்பர் யோஷிகவா தடுத்தார். ஆகாஷ்தீப் சிங்கின் கோல் அடிக்கும் முயற்சிக்கும் ஜப்பான் வீரர்கள் முட்டுக்கட்டை போட்டனர். 20-வது நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த அற்புதமான வாய்ப்பை கார்த்தி செல்வம் வெளியே அடித்து வீணடித்தார். 28-வது நிமிடத்தில் ஜப்பான் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை வருண் குமாரின் கால்களுக்கு ஊடாக அடித்து கோலாக மாற்றினார் கென் நகயோஷி. 30-வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் கோல் அடிக்கும் முயற்சியை இந்திய அணியின் கோல்கீப்பர் கிருஷ்ணன் பகதூர் தடுத்தார். 2-வது கால்பகுதியில் ஜப்பான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

34-வது நிமிடத்தில் ஆகாஷ் தீப் சிங்கின் கோல் அடிக்கும் முயற்சியை ஜப்பான் கோல்கீப்பர் தடுத்தார். அடுத்த நொடியில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய அணி மீண்டும் ஒருமுறை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளத் தவறியது. 43-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்ற ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது.

46-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இதை ஹர்மன்பிரீத்சிங் வீணடித்தார். 47-வது நிமிடத்தில் ஜப்பான் அணியின் கோல் அடிக்கும் முயற்சியை இந்திய அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அற்புதமாக தடுத்தார். அடுத்த சில நொடிகளில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ளத்தவறியது.

56-வது நிமிடத்தில் நீலகண்ட சர்மா, சுக்ஜீத் சிங் கூட்டணி அமைத்து பந்தை விரைவாக வட்டத்துக்குள் கடத்திச் சென்றனர். ஆனால் ஜப்பான் கோல்கீப்பர் யோஷிகவா திறம்பட செயல்பட்டு கோல் விழவிடாமல் தடுத்தார். இறுதிக்கட்ட நிமிடங்களில் இந்திய அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

வாய்ப்புகள் வீணடிப்பு: முதல் பாதியில் இந்திய அணிக்கு 8 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் ஒன்றைகூட இந்திய வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணடித்தனர். மாறாக ஜப்பான் அணிக்கு 2 பெனால்டி கார்னர் வாய்புகள்தான் கிடைத்தன. அதில் ஒன்றை அந்த அணி கோலாக மாற்றியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x