Published : 12 Jul 2014 12:01 PM
Last Updated : 12 Jul 2014 12:01 PM

உலகக் கோப்பையை வெல்லாவிட்டால் நான் சாதித்ததில் பயனில்லை: க்ளோஸ்

உலகக் கோப்பையை வெல்லாமல் போனால் நான் 16 கோல்கள் அடித்து சாதனை படைத்ததில் எந்த பயனும் கிடையாது என்று ஜெர்மனி ஸ்டிரைக்கர் மிரோஸ்லாவ் க்ளோஸ் தெரிவித்துள்ளார்.

பிரேசிலுக்கு எதிரான அரையிறுதியில் கோலடித்ததன் மூலம் தனது 16-வது கோலைப் பதிவு செய்த க்ளோஸ், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோலடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார். வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் ஜெர்மனியும் அர்ஜென்டீனாவும் மோதவுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் மிரோஸ்லாவ் க்ளோஸ் விளையா டவுள்ள 2-வது இறுதிப் போட்டியாகும்.

இந்த நிலையில் க்ளோஸ் கூறியிருப்பதாவது: நான் இப்போது ரொனால்டோவின் சாதனையை (உலகக் கோப்பையில் அதிக கோலடித்தது) முறியடித்துள்ளேன். ஆனால் இது மற்றொரு நாள் முறியடிக்கப்படும். இப்போதைய நிலையில் எனது முழு கவனமும் உலகக் கோப்பை இறுதியாட்டத்தின் மீதுதான் உள்ளது. ஒருவேளை இறுதியாட்டத்தில் அர்ஜென்டீனா விடம் நாங்கள் தோற்றால் நான் அதிக கோலடித்து உலக சாதனை படைத்ததில் எந்த பயனும் கிடையாது என்றார்.

தனது உலக சாதனையை ரொனால்டோ வரவேற்றிருப்பது குறித்துப் பேசிய க்ளோஸ், “இத்தாலியில் இப்போதும் கால்பந்தின் கடவுளாகவே பார்க்கப் படுகிறார் ரொனால்டோ. இத்தாலி லீக்கில் அவர் விளையாடியதை நான் பார்த்திருக்கிறேன். நான் பார்த்தவர்களில் ரொனால்டோ மிக வலுவான வீரர். ஆனால் அவருடைய சாதனை (அதிக கோல் சாதனை) அவரது சொந்த மண்ணில் முறியடிக்கப்பட்டது அவருக்கு வருத்தத்தைக் கொடுத்திருக்கும். உலகக் கோப்பையில் ரொனால்டோ அடித்த 15 கோல் சாதனையை நான் சமன் செய்ததை அவர் வரவேற்றிருக்கிறார். இப்போது நான் படைத்திருக்கும் 16 கோல் சாதனையை யார் வேண்டுமானாலும் சமன் செய்யலாம். அவர்களை நான் வரவேற்கிறேன்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x