Published : 14 Jul 2023 02:33 PM
Last Updated : 14 Jul 2023 02:33 PM

WI vs IND | ஜெய்ஸ்வாலின் அபார ஆட்டம் நீங்கலாக ‘மண்’ பிட்ச், மந்தமான பேட்டிங்!

சதம் பதிவு செய்தி ஜெய்ஸ்வால்

எப்படியோ ஒருவழியாக ஒரு புதிய வீரர் டாப் ஆர்டரில் வந்ததும் பிரகாசித்து சாதனைகளை உடைக்கும் சதம் கண்டு, ஆட்டமிழக்காமல் இருப்பது இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அளிக்கின்றது. ஜெய்ஸ்வால், நீண்ட காலம் இந்திய அணிக்காக சேவை செய்யும் வீரராக நம்பிக்கை அளிக்கிறார். மாறாக ஓல்ட் ஹார்ஸ் என்று சொல்லப்படுபவர்கள் இந்தத் தொடரை தாங்கள் இழந்த பெயரை மீட்பதற்கும், இழந்த சராசரியை மீட்டெடுப்பதற்கும் பயன்படுத்திக் கொள்வது டெஸ்ட் போட்டிக்கான மோசமான விளம்பரம் என்றே கூற முடியும்.

விராட் கோலி நேற்று முதல் பவுண்டரியை அடிக்க 80 பந்துகள் எடுத்துக் கொண்டார். அவரைப் போன்ற ஒரு வீரர், அதாவது பலராலும் ஜீனியஸ், சச்சினை விடவும் பிஸ்தா என்றெல்லாம் விதந்தோதி ஹைப் செய்யப்படும் ஒரு வீரர் 96 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 36 ரன்களை எடுத்தது அவரது பேட்டிங் திறமைகளுக்கான சான்றுகளை அழிப்பதாக உள்ளது. ரோஹித் சர்மாவும் 221 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். நேற்று ஒருநாள் முழுவதும் ஆடி 232 ரன்களை 2 விக்கெட்டுகள் இழப்புக்கு எடுத்துள்ளனர். இதிலும் சுப்மன் கில் சோபிக்கவில்லை.

பல சாதனைகள் உடைக்கப்பட்டுள்ளன. ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் கண்ட 17வது இந்திய வீரர் ஆனார். இவருக்கும் ரோஹித் சர்மாவுக்குமான முதல் விக்கெட் கூட்டணி 229 ரன்கள், ஆசியாவுக்கு வெளியே அதிக ரன்கள் எடுத்த தொடக்க ரன்கள் ஆகும். இதற்கு முன்பாக ஓவலில் கவாஸ்கரும், சவுகானும் தொடக்கத்தில் எடுத்த 213 ரன்களே ஆசியாவுக்கு வெளியே இந்திய தொடக்க ஜோடியின் அதிகபட்ச ரன்களாக இருந்தது.

டொமினிகா பிட்ச் மண் நிறைந்த பிட்ச், இதில் வேகப்பந்து வீச்சுக்கு ஒன்றுமே இல்லை, ஸ்பின் பந்துகள் மெதுவாக திரும்புகின்றன. இதில் மே.இ.தீவுகளின் ஆஃப் ஸ்பின்னர் ரக்கீம் கார்ன்வால் பந்துகளை நன்றாகவே திருப்பினார், ரோஹித் சர்மா ஒருமுறை எல்பி ஆனார். ஆனால் ரீப்ளேயில் பந்து அதீதமாகத் திரும்பியதாகக் காட்டியது, அதை நம்ப முடியவில்லை. கோலி கேப்டனாக இருந்த போது நடுவர்கள் அவுட் கொடுக்கத் தயங்குவதைப் பார்த்திருக்கிறோம். இப்போது ரோஹித் சர்மா ‘டர்ன்’ போலும்.

ஒருபுறம் ஆஷஸ் தொடரின் இதுவரை முடிந்த அனைத்து டெஸ்ட் போட்டிகளும் விறுவிறுப்பின் உச்சமாகவும். அட்டகாசமான பவுலிங், களவியூகம், உத்திகள், அதை விஞ்சும் பேட்டிங் திறமைகள் என்று பார்த்து விட்டு இங்கு வந்து உட்கார்ந்தால் ஒன்றுமேயில்லை. மகா அறுவையான டெஸ்ட் போட்டியாக உள்ளது. மே.இ.தீவுகளைக் குறை கூற முடியாது. மே.இ.தீவுகளின் இந்த நிலைமைக்கு ஐசிசி-யும் ஐபிஎல்-ம் தான் காரணம் என்று சிலர் கூறுவதில் நியாயம் உள்ளது.

ஒவ்வொரு முறையும் பெரிய தோல்வியைச் சந்தித்த பிறகு மிகச்சரியாக இந்திய அணிக்கு இலங்கை, வங்கதேசம், மே.இ.தீவுகள் அணிகளுடன் டெஸ்ட், ஒருநாள் டி20 தொடர் வைக்கப்படுவது எதேச்சையானது அல்ல. ஏன் ஆப்கானிஸ்தானுடன் ஆடலாமே. மே.இ.தீவுகளுடனான இத்தகைய போட்டிகளினால் கிரிக்கெட்டுக்கும் பயனில்லை. இந்திய வீரர்கள் ஆவரேஜை ஏற்றிக் கொள்ள மட்டுமே பயன்படும். இங்கு ஆடுவார்கள் பிறகு வலுவான அணிகளுக்கு எதிராக சொதப்புவார்கள். இது தெரிந்த கதைதான்.

ஜெய்ஸ்வால் என்னும் வித்தியாசன்! சில சமயங்களில் ஜெய்ஸ்வால் போன்ற அறிமுக அசத்தல் வீரர்கள் மட்டுமே கிரிக்கெட்டை கட்டி இழுத்துக் கொண்டு செல்கிறார்கள். சில வீரர்கள் ஆட்டத்தின் சுமையையே தங்கள் திறமையினால் கட்டி இழுத்துச் செல்வார்கள். அப்படிப்பட்டவர்களில் இப்போது பாட் கமின்ஸ், அவர் ஒரு அதிசயம்தான். அதே போல் பென் ஸ்டோக்ஸ். வேறு யாரையும் இந்திய தரப்பில் கூற முடியாது. ஆனால், இப்போது ஜெய்ஸ்வால் மீது நம்பிக்கைப் பிறந்துள்ளது. கருண் நாயர், மணீஷ் பாண்டே, இன்னும் எண்ணற்ற வீரர்களுக்கு கரியர் தொடங்கிய இடத்திலேயே முடிந்தது போல் இவருக்கும் ஆகாமல் இருக்க பிரார்த்திப்போம்.

ஜெய்ஸ்வால் ஆட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில், மிகவும் இயற்கையாக அவரது ஆட்டம் அமைந்துள்ளதே. அவருக்கு டிஃபன்ஸ் ஆடவும் வருகிறது, ரன்கள் குவிக்கும் உத்தியும் வருகிறது. நீண்ட நேரம் கிரீசில் நின்று பெரிய சதங்களை எடுக்கும் பொறுமையும், பேட்டிங் உத்தியும், கவனமும், விவேகமும் இவரிடம் மிகவும் இயல்பாக அமைந்துள்ளது ஆச்சரியமானது.

ஷாட்கள் பீல்டர்கள் கைக்குச் சென்றன, ஸ்வீப் ஷாட் மாட்டவில்லை, ரிவர்ஸ் ஸ்வீப் கைகூடவில்லை, ஒருமுறை ஸ்வீப் ஆடும்போது பந்து ஹெல்மெட்டைத் தாக்கியது. ஆனாலும் ஜெய்ஸ்வால் முகத்தில் கூட கோளாறுகளை வெளிக்காட்டவில்லை. பந்தை நெருக்கமாக கவனித்து வந்தவுடன் ஆடுகிறார். முன்னாலேயே காலைப் போட்டு மட்டையைப் பந்தின் மேல் தொங்க விடுவதில்லை. கடைசியில் இந்தியாவின் எந்த ஒரு அறிமுக சத நாயகனும் எதிர்கொள்ளாத எண்ணிக்கையில் பந்துகளைச் சந்தித்து சாதனை புரிந்தார்.

ஜெய்ஸ்வால் எப்படி வேண்டுமானாலும் ஆடும் திறமை கொண்டவர். மூன்று வடிவத்திலும் தொடக்க வீரராகக் களமிறங்கும் திறமை கொண்டவர். இப்படிச் சொல்லும் போதே, ஒரு வீரரை எப்படி கேப்டன் பயன்படுத்தி அடுத்த தலைமுறை வீரராக உருவாக்குகிறார் என்பது முக்கியம். இப்போதைக்கு ஜெய்ஸ்வாலுக்கு ஹேட்ஸ் ஆஃப்.

ஆனால், இது போன்ற டெஸ்ட் போட்டிகள் ஜெய்ஸ்வால் போன்றவர்களுக்கு ஓர் சிறந்த அனுபவமாகவும் நம்பிக்கை ஊட்டும் களமாகவும் இருக்க, இந்திய சீனியர் வீரர்களின் ஆட்டம் கவலையளிப்பதாக உள்ளது. இப்படிப்பட்ட மந்தமான ஆட்டங்களை தங்கள் சுயநலத்துக்காகவும், ஆவரேஜை ஏற்றிக் கொள்ளவும் ஆடுவது எதிரில் ஆடும் இளம் வீரர்களிடத்தில் எதிர்மறை மனோநிலையை உருவாக்கி விடும் என்பதில் எச்சரிக்கை தேவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x