Published : 13 Oct 2017 10:10 AM
Last Updated : 13 Oct 2017 10:10 AM

பிபா யு 17 உலகக் கோப்பை கால்பந்து: கானாவிடமும் வீழ்ந்தது இந்திய அணி

பிபா யு 17 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்தது.

பிபா யு 17 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடமும், 2-வது ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவிமுடம் தோல்வியடைந்திருந்தது.

இந்நிலையில் இந்திய அணி நேற்று டெல்லியில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான கானா அணியுடன் மோதியது.தொடக்கம் முதலலே கானா அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் கோல் அடிக்கும் சில முயற்சிகளை இந்திய கோல்கீப்பர் தீரஜ் முறியடித்தார். எனினும் அந்த அணி தொடர்ந்து அச்சுறுத்தியது.

43-வது நிமிடத்தில் எரிக் ஆயியா, இந்திய அணியின் பலவீனமான தடுப்பாட்டத்தை பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் கானா 1-0 என முன்னிலை பெற்றது. 52-வது நிமிடத்தில் எரிக் ஆயியா மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

இம்முறையும் இந்திய தடுப்பாட்ட வீரர் செய்த தவறை அவர், சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஆட்டம் முடிவடைய 4 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் கானா அணி மேலும் இரு கோல்கள் அடித்து அதிர்ச்சி கொடுத்தது.

அந்த அணி வீரர்களான தன்சோ 86-வது நிமிடத்திலும், டோகு 87-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர்.

கடைசி வரை முயன்றும் இந்திய வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் கானா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்த இந்தியா தொடரில் இருந்து வெளியேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x