

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 15-ம் தேதி தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நாளான நேற்று (5-ம் நாள்) கருட சேவைக் காண பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். கருட சேவையுடன் புரட்டாசி முதல் சனிக்கிழமையும் நேற்று வந்ததால், பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது.
தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வெள்ளிக்கிழமை இரவு முதலே திருமலைக்கு படை எடுத்த வண்ணம் இருந்தனர். நேற்று காலை மோகினி அலங்கார சேவையின்போது திருமலையில் உள்ள 4 மாட வீதிகளிலும் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கூடியிருந்தனர்.
இதுதவிர மற்ற பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டிருந்தனர். மேலும் திருப்பதி - திருமலை இடையே நேற்று மதியம் முதல் விடிய, விடிய சுமார் 2 லட்சம் பேர் வந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதலால் இந்த கருட சேவைக்கு சுமார் 5 லட்சம் பக்தர்கள் திரண்டு உள்ளனர்.
5000 போலீஸார் பாதுகாப்பு
கருட சேவையையொட்டி உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள் என ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதால், சுமார் 5,000 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் தேவஸ்தான கண்காணிப்பு படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதுதவிர, ஆக்டோபஸ் கமாண்டோ படை, ஆயுதப்படையினரும் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
ட்ரோன் கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணியில் இருந்து இருசக்கர வாகனங்கள் திருமலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஏழுமலையானை தரிசிக்க அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டதால், வெறும் சர்வ தரிசனம் வாயிலாக மட்டுமே ஏழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று மாலை சரியாக 6.30 மணிக்கு கருட வாகனத்தில் மலையப்பர் திருமலையில் உள்ள வாகன மண்டபத்திலிருந்து எழுந்தருளினார். அப்போது விண்ணைப் பிளக்கும் அளவுக்கு கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் கோஷமிட்டனர். பின்னர் மாட வீதிகளில் கருட வாகன சேவை நீடித்தது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த ராட்சத டிவி மூலம் தேவஸ்தானத்தின் எஸ்விபிசி சேனல் வாகன சேவையை நேரடி ஒளிபரப்பு செய்தது. காலை 10 மணி முதலே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாட வீதிகள் உட்பட திருமலையில் பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், தேநீர் போன்றவை வழங்கப்பட்டது. தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி எம். ரவிச்சந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி உட்பட பல்வேறு அதிகாரிகள் அடிக்கடி பக்தர்களிடம் வசதிகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தனர்.