Published : 12 Jun 2014 01:15 PM
Last Updated : 12 Jun 2014 01:15 PM

குரு பெயர்ச்சி பொதுப் பலன் 19-6-2014 முதல் 14-7-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம்

சமாதானத்துடன், சத்தியத்தையும் சொந்த வாழ்வில் கடைப்பிடிப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி, வாய்ப்புகளையும், நிம்மதியையும் தந்தார் குரு பகவான். இப்போது 19.6.2014 முதல் 14.07.2015 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால் கொஞ்சம் மனக் கலக்கத்தையும், பணப்பற்றாக்குறையையும் தருவார். 10-ம் இடம் பதவியை கெடுக்குமே, அந்தஸ்தைக் குறைக்குமே என்றெல்லாம் பெரிதாகக் கவலைப்பட வேண்டாம்.

குரு உச்சமாகி நிற்பதாலும் உங்களின் யோகாதிபதிகளின் நட்சத்திரங்களில் செல்லவிருப்பதாலும் ஓரளவு நன்மையே செய்வார். என்றாலும் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்கள் மத்தியில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். முக்கியக் கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்பாக சட்ட ஆலோசகரைக் கலந்தாலோசிப்பது நல்லது. வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். வழக்கறிஞரை மாற்ற வேண்டிவரும். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவு வரும். பெரிய பிரச்னைகளெல்லாம் வந்துவிடுமோ, இதுவரை கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற கவலைகள் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையொப்பமிட்டுச் சிக்கிக்கொள்ளாதீர்கள். பணம் வாங்கி தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.

பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய ஒருவித அச்சம் வந்து நீங்கும். உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தக்கூடும். முக்கிய விஷயங்களுக்கெல்லாம் இடைத்தரகர்களை நம்பாமல் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு 2-ம் வீட்டின் மீது விழுவதால் ஷேர் மூலம் பணம் வரும். திடீர் செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். குரு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

வாகனத்தை சீர் செய்வீர்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனை பைசல் செய்ய வழி பிறக்கும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.

கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி வகைகளால் லாபம் உண்டு. குரு 10-ல் நுழைந்திருப்பதால் உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மறைமுக அவமானங்களும், வீண் பழிகளும் வரக்கூடும். அடிக்கடி இடமாற்றம் உண்டு. அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், சகிப்புத் தன்மையும் இருந்தால் மட்டுமே இந்த குரு மாற்றம் ஓரளவு வெற்றியைத் தரும்

விருச்சிகம்

அடித்தட்டு மக்களின் உரிமைக்காக உரக்கக் குரல் கொடுப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து தொட்டதையெல்லாம் நட்டப்படுத்திய குரு பகவான் இப்போது 19.6.2014 முதல் 14.07.2015 வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். அடுத்தடுத்த பயணங்களால் அலைக்கழிக்கப்பட்டீர்களே! வேலைச் சுமையால் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசவும் நேரமில்லாமல் தவித்தீர்களே! உறவினர்கள், நண்பர்கள், விருந்தினர்களின் வருகையாலும் செலவுகள் அதிகமாகிக் கொண்டே போனதே! இனி அவசியப்படுபவர்களை மட்டும் வீட்டிற்கு அழைப்பீர்கள்.

பிள்ளைகளின் பொறுப்பற்ற போக்கால் தூக்கத்தை இழந்தீர்களே! இனி குரு உங்கள் 5-ம் வீட்டைப் பார்க்க இருப்பதால் மகனின் அலட்சியப் போக்கு மாறும். கூடாப் பழக்கங்களிலிருந்து விடுபடுவார். படிப்பிலே ஆர்வம் காட்டுவார். மகளுக்குப் பொருத்தமான வரன் தேடி ஓய்ந்து போய்விட்டீர்களே! இனி நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். வெளிமாநிலம், வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன் அமைய வாய்ப்பிருக்கிறது. உங்கள் தன-பூர்வ புண்யாதிபதியான குரு பகவான் உச்ச பலம் பெறுவதால் வீடு, மனை வாங்குவீர்கள்.

தங்க ஆபரணங்களும் சேரும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். அவருடனான மோதல் போக்கு மாறும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடிவடையும். சிலர் புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வேலை கிடைக்கும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் முகம் மலரும். நோய் விலகும். அடிக்கடி ஏற்பட்ட விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். குரு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் பேச்சில் கம்பீரம் பிறக்கும்.

தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதரர் உதவுவார். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். சந்தை ரகசியங்களை தெரிந்துகொள்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கெமிக்கல், இரும்பு, மருந்து வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய தொலைநோக்குச் சிந்தனையை உயரதிகாரி பாராட்டுவார். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, சலுகைகளெல்லாம் தடையின்றிக் கிடைக்கும். சக ஊழியர்களும் உங்களை மதிக்கத் தொடங்குவார்கள்.

ஆக மொத்தம் இந்த குரு மாற்றம் வாழ்வில் திடீர் யோகங்களையும், திருப்பங்களையும், மரியாதையையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.



தனுசு

மனித நேயச் சிந்தனை அதிகமுள்ளவர்களே! உங்கள் ராசிநாதனான குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து சின்ன சின்ன சந்தோஷங்களையும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கையும் தந்தார். இப்போது 19.6.2014 முதல் 14.07.2015 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் சென்று மறைகிறார். உங்கள் சுகாதிபதியான குரு பகவான் மறைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச் சுமை அதிகமாகும்.

மனைவி, பிள்ளைகளுடன் பேசும் நேரம் குறையும். ஒரே வேலைகளை இரண்டு, மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டிவரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்று மதத்தவர்கள், மொழியினரால் ஆதாயமடைவீர்கள். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும்.

மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். மகனின் உயர்கல்வி, உத்யோகத்திற்காக சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். குரு 8-ல் மறைவதால் மறதியால் விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை இழக்க நேரிடும். முன்கோபத்தால் நல்லவர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். குடும்பத்தினருடன் வெளியூர் செல்லும் போது வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்துவிட்டுச் செல்வது நல்லது. வங்கிக் காசோலையில் முன்னரே கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். குரு உச்சமாவதாலும், முக்கியமான இடங்களைப் பார்ப்பதாலும் கெடுபலன்கள் குறையும். உங்களிடம் மறைந்திருக்கும் மற்ற திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். உங்களுடைய படைப்புகள் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வெளியாகும்.

குரு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. இங்கிதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். குடும்பத்தில் ஓரளவு அமைதி நிலவும். குரு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழிச் சொத்து கைக்கு வரும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆழ்ந்த உறக்கம் வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்கக் கடுமையாக உழைக்க வேண்டி வரும்.

வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கண்டிப்பு காட்ட வேண்டாம். உத்யோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். உங்களுக்கு ஆதரவாக இருந்த பழைய அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றலாவார். புது அதிகாரியால் நெருக்கடிகள் வந்து நீங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

இந்த குருமாற்றம் அலைச்சலையும், ஓய்வின்மையையும் தந்தாலும் மற்றொரு பக்கம் பணவரவையும் வெற்றியையும் தரும்.

மகரம்

எதிலும் அழகையும், நேர்த்தியையும் விரும்பு பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்து உங்களைப் பல பிரச்சினைகளிலும் சிக்க வைத்ததுடன், அசிங்கங்களையும், கௌரவக் குறைவையும், ஏமாற்றங்களையும் தந்து தூக்கத்தைக் கெடுத்த குரு பகவான் இப்போது 19.6.2014 முதல் 14.07.2015 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் அழகு, ஆரோக்கியம் கூடும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

தன்னம்பிக்கை பெருகும். பிரபலங்கள் ஆதரவாகப் பேசுவார்கள். தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தை கூடிவரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். வருமானம் உயரும். பூர்வீகச் சொத்து பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பீர்கள். வழக்கு சாதகமாகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். எவ்வளவோ சிகிச்சை செய்தும், மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு குழந்தையில்லையே என வருந்திய தம்பதிகளுக்கு அழகான வாரிசு உருவாகும்.

பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். அயல்நாட்டில் தரமான பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பெற உங்கள் பிள்ளைகளுக்கு வாய்ப்பு வரும். உறவினர், நண்பர் வருகையால் வீடு களைகட்டும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். பழைய நகைகளை விற்றுப் புது டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். அடிக்கடி தொல்லை கொடுத்த, பழுதாகி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள். நீண்ட நாளாக வராமலிருந்த பணமெல்லாம் கைக்கு வரும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தீர்க்க வழி பிறக்கும். உங்களையும் அறியாமல் உங்களிடம் இருந்துவந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும். இனி நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.

பெரிய பதவிகள் தேடி வரும். தடைபட்ட வீடு கட்டும் பணியைத் தொடர்வீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வேலை கிடைக்கும். குரு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியம் கூடும். அதிகாரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். குரு லாப வீட்டை பார்ப்பதால் சகோதரங்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

வியாபாரத்தில் அமோகமாக லாபம் இருக்கும். புது இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். புகழ் பெற்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களை கவருவீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். உயரதிகாரிகள் உங்களைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள்.

இந்த குரு மாற்றம் இடியாப்பச் சிக்கல்களாய் இருந்த உங்கள் வாழ்க்கையில் அதிரடி அதிர்ஷ்டங்களைத் தருவதாக அமையும்.



கும்பம்

முயற்சியை முதுகெலும்பாகக் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து அடிப்படை வசதி, வாய்ப்புகளை அதிகரிக்க வைத்தாரே! பணப்புழக்கம் சரளமாக இருந்ததால் சொத்து வாங்கினீர்களே! நல்லது கெட்டது நான்கையையும் அறிந்து செயல்பட வைத்தாரே! நாலு பேர் மதிக்கத்தக்க வகையில் உங்களின் தராதரத்தை உயர்த்திக் காட்டினார் குரு பகவான்.

இப்போது 19.6.2014 முதல் 14.07.2015 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சென்று மறைவதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்திலும் சின்ன சின்ன சலசலப்புகள் வரும். கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். வீண் சந்தேகத்தை விலக்கிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் பேச்சைக் கேட்டு மனைவியை குறை கூற வேண்டாம்.

தவறானவர்களையெல்லாம் நல்லவர்கள் என நினைத்து ஏமாறாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பிப் பெரிய முடிவுகளெல்லாம் எடுக்காதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது.

சிலர் உங்களை தவறான போக்கிற்குத் தூண்டுவார்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீட்டைப் புதுப்பிப்பது, அழகுபடுத்துவது, விரிவுபடுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குரு 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பண வரவு திருப்தி தரும். நீங்கள் எதிர்பார்க்கும் தேதியில் பணம் கிடைக்காவிட்டாலும் கடைசி நேரத்தில் கைக்கு வந்து சேரும்.

குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டு. புது வேலை கிடைக்கும். வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். உங்களிடம் ஆலோசனை கேட்டு விட்டு அதைத் தாங்கள் யோசித்ததாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் நல்ல பெயர் வாங்கிக்கொள்வார்கள். உங்கள் திறமைகளை நேரடியாக மூத்த அதிகாரிகளிடம் சிலர் கொண்டு செல்ல மறுப்பார்கள்.

இந்த குருமாற்றம் சிறுசிறு பிரச்னைகளால் உங்களைப் பல நேரங்களில் முணுமுணுக்க வைத்தாலும் சமயோசித புத்தியால் ஓரளவு சாதிக்க வைக்கும்.

மீனம்

அருவி நீர் போல அதிர்ந்து பேசாமல் பனிநீர் போல பாசமாய் பேசுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 4-ல் அமர்ந்து குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் கொடுத்து வந்ததுடன், எந்த வேலையையும் முழுமையாக செய்யவிடாமல் உங்களை பைத்தியம் பிடிக்க வைத்த குரு பகவான். இப்போது 19.6.2014 முதல் 14.07.2015 வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும்.

பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் இனி குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்துகொள்வார்கள். உங்கள் அறிவுரைகளையும் ஏற்றுக் கொள்வார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். கோலாகலமாகத் திருமணத்தை முடிப்பீர்கள். மகனின் கூடாப் பழக்கம் விலகும். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் சேர வேண்டிய பங்கு கைக்கு வரும்.

தாய்க்கிருந்த நோய் விலகும். ஷேர் மூலம் பணம் வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர்களுடன் இருந்து வந்த விரிசல்கள் விலகும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால் நோய் விலகும். எப்போதும் ஏதோ ஒரு கவலையுடன் சோகம் படர்ந்திருந்த உங்கள் முகம் இனி மலரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. குரு 9-ம் வீட்டை பார்ப்பதால் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

வழக்கு சாதகமாகும். புது முதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள். தந்தையார் ஆதரவாகப் பேசுவார். தந்தை வழி சொத்து சேரும். லாப வீட்டை குரு பார்ப்பதால் அண்ணன் உறுதுணையாக இருப்பார். சிலருக்கு ஷேர் மூலம் பணம் வரும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்த சச்சரவு நீங்கும். வியாபாரத்தில் அதிரடியாக லாபம் உண்டு. பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலமாக உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும்.

பங்குதாரரை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கபட்ட உரிமைகள் கிடைக்கும். அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். சம்பள பாக்கி கைக்கு வரும். பதவி உயர்வுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

இந்த குரு மாற்றம் எங்கும் முதல் வரிசையில் உங்களை உட்கார வைப்பதுடன் வசதி, வாய்ப்புகளை அள்ளித் தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x