Published : 25 Dec 2020 10:11 AM
Last Updated : 25 Dec 2020 10:11 AM

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: ரிஷப ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

ரிஷப ராசி வாசகர்களே

பெருந்தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்ட நீங்கள், இதமான பேச்சால் எல்லோரையும் கவர்ந்திழுப்பவர்கள். தன்கையே தனக்குதவி என்று வாழும் நீங்கள், கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி வாழ்வின் சிகரத்தை எட்டிப் பிடிப்பவர்கள். இதுவரை கிட்டதட்ட மூன்றாண்டு காலமாக அஷ்டமத்தில் நின்று கொண்டு எல்லோரிடமும் கெட்ட பெயர் வாங்கித் தந்து, பல பிரச்சினைகளில் சிக்க வைத்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் நமக்கேன் வம்பு என்று ஓரமாய் ஒதுங்கியிருந்த நீங்கள், இனி எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள். தோல்வி பயத்தால் துவண்டிருந்த உங்கள் மனத்தில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை துளிர்விடும். உங்களின் பாக்கியாதிபதியாகிய சனிபகவான் ஆட்சிபெற்றுச் சொந்த வீட்டில் வலுவாக அமர்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

இங்கு வந்ததிலிருந்து நிம்மதி இல்லையே என்று நினைத்திருந்த வீட்டை மாற்றி ராசியான வீட்டுக்குச் செல்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்த மனஸ்தா பங்கள் நீங்கும். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். பிள்ளைகளின் அடிமனத்தி லிருக்கும் பயத்தைப் போக்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மனக்கசப்பால் ஒதுங்கி இருந்த உறவினர்கள் இனிப் பேசுவார்கள்.

நீண்டகால லட்சியமாக சொந்த வீடு வாங்குவதற்காகச் செய்த முயற்சிகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்சினை தீரும். ஆனால், தந்தைக்கு ரத்த அழுத்தம், முதுகு, முழங்கால் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பிதுர்வழிச் சொத்துப் பிரச்சினை தலைத்தூக்கும். பணம் வந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பருமனாக இருந்த நீங்கள், பார்ப்பதற்கு அழகாவீர்கள். சனிபகவான் 29.03.2023 முதல் 24.08.2023 வரை உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் உத்தியோகத்தில் வேலைச்சுமை, மறைமுக அவமானம், ஏமாற்றம் வந்துச் செல்லும்.

சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டைப் பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தன்னிச்சையாகச் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வீடு, வாகன வசதி பெருகும். சனிபகவான் உங்களின் ஆறாம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். மறை முக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். புதிய சொத்து சேரும்.

சனிபகவானின் நட்சத்திர பலன்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் அரைகுறையாக நின்ற கட்டிட வேலைகள் முழுமையடையும். பழைய கடன் தீரும். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரும். இரவுநேரப் பயணங்களை தவிர்த்துவிடுங்கள்.

திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். விலையுயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் ஏமாற்றம், வீண் அலைச்சல், காரியத்தடைகள் வந்துபோகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் இக்காலக் கட்டத்தில் மனைவிக்கு மாதவிடாய் கோளாறு, வீண் செலவுகள், சிறுசிறு வாகன விபத்து வந்து நீங்கும்.

நல்ல ஊழியர்கள் அமைவார்கள். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு தவறாக முதலீடு செய்து கையை சுட்டுக் கொண்டீர்களே! இனி சந்தை நிலவரம் அறிந்து புது சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். தடைபட்ட ஒப்பந்தங்கள் தேடி வரும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். வங்கியில் வாங்கியிருந்த கடனை ஒருவழியாக கட்டி முடிப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, பாசுமதி அரிசி, எண்ணெய் வகைகளால் லாபம் உண்டு.

உங்களின் பணியில் திருப்தியில்லை என்று அடிக்கடி உயரதிகாரி புலம்பித்தள்ளினாரே, இனி உங்கள் கை ஓங்கும். உங்களை புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். உங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பழைய சம்பளப் பாக்கிகளும் வந்து சேரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலைகள் வந்து அமையும். இந்தச் சனி மாற்றம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தியை விலக்குவதுடன் கடின உழைப்பால் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்

விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் பாதையிலுள்ள கல்பட்டு எனும் ஊரில் அருள்பாலிக்கும் சாந்த சனீஸ்வரரை புனர்பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வாய் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். வாழ்வில் வளம் பெருகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x