Last Updated : 02 Nov, 2020 08:35 PM

 

Published : 02 Nov 2020 08:35 PM
Last Updated : 02 Nov 2020 08:35 PM

சனி பகவானைப் பார்த்து பயப்படணுமா?  தண்டிப்பார்; கண்டிப்பார்; காப்பார்! 

சனி பகவான் என்றாலே நாம் எல்லோரும் பயப்படுவோம். ‘சனீஸ்வரர் ஆட்டிப்படைக்கிறாரேப்பா’ என்று புலம்புவோம். ஆனால் சனி பகவானைக் கண்டு பயப்படவே தேவையில்லை என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

சனீஸ்வரருக்கு வேண்டியவர் வேண்டாதவர் எனும் பாரபட்சமெல்லாம் இல்லை. சனீஸ்வரர் என்பவர், நவக்கிரகங்களில் ஒரு கிரகம். நவக்கிரகங்களில் ஈஸ்வரப் பட்டத்துடன் அருள்பாலிக்கும் ஒரே கிரகம்... சனி பகவான் தான்.

நாம் என்ன செய்கிறோமோ அதற்கு உண்டான, அந்தச் செயலுக்கு உண்டான விளைவுகளைப் பலன்களாகத் தந்தருள்பவர் சனி பகவான். இந்த விஷயத்தில் சனீஸ்வரர் ஒரு நீதிபதியைப் போல் செயலடுபவர் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

நாம் செய்யும் பாவங்களுக்குத் தண்டனை தருபவரும் சனீஸ்வரர். புண்ணியங்களுக்கு உண்டான பலன்களை மும்முடங்காகத் தருபவரும் இவரே.
மற்ற கடவுளரிடம் ‘நான் தெரியாமப் பண்ணிட்டேன். மன்னிக்கணும்’ என்று கேட்கலாம். ஆனால், சனீஸ்வரரிடம் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது. கேட்டாலும் மன்னிப்பெல்லாம் தரமாட்டார். தண்டனையைத்தான் வழங்குவார். அதனால்தான் சனீஸ்வரர் என்றாலே எல்லோரும் பயப்படுகிறோம்.

அப்படி தவறு செய்பவர்களை, சனி பகவான் பிடிக்கும் காலகட்டத்தைத்தான் ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, கண்டச்சனி, மங்கு சனி என்றெல்லாம் சொல்கிறது ஜோதிடம். அந்த காலகட்டத்தில் சனி தோஷம் பிடித்தவர்கள் நன்மைகள் பல செய்து, இறைவனை மனமுருகப் பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், ஓரளவு பாதிப்பைக் குறைப்பார். மிகப்பெரிய கஷ்டங்களை சிறிய கஷ்டமாக்கித் தருவார். ஆனாலும் தண்டனை உண்டு. குறைந்தபட்ச தண்டனையாகத் தருவார் சனீஸ்வரர்.
முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், வீண் அலைச்சல் என்றெல்லாம் தருவார். பணிச்சுமை, சோம்பல், விளைச்சலில் நஷ்டம், தொழிலில் பின்னடைவு, உடல் உறுப்புகளில் பிரச்சினை என ஏதேனும் ஏற்படுத்திக் கொடுப்பார்.

இந்தக் காலகட்டத்தில், சனீஸ்வரரை மனமுருக பிரார்த்தனை செய்வதுதான் ஒரே வழி. தினமும் கைப்பிடி சாதத்தில் கொஞ்சம் எள் சேர்த்து காகத்துக்கு உணவிடுங்கள். சனிக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது ஐந்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் எற்றி வழிபடுங்கள். சிவ துதி பாராயணம் செய்யுங்கள். அனுமன் சாலீசா பாராயணம் செய்யுங்கள். அனுமன் வழிபாடு செய்யச் செய்ய, சனி பகவானின் பாதிப்பு விலகும் என்பது ஐதீகம்!

சிவபெருமான், லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடும் மிகுந்த பலனைத் தந்தருளும். சனீஸ்வர காயத்ரி சொல்வதும் நற்பலன்களை வழங்கும்.

ஆலயங்களில் உள்ள நவக்கிரகத்தில் சனீஸ்வர பகவானை வலம் வந்து பிரார்த்தனை செய்யுங்கள். திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள நளதீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சனிபகவானை வழிபடுவது பாவங்களைப் போக்கி நன்மைகளைத் தரும். திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு சென்று அங்குள்ள பொங்கு சனிபகவானையும் வழிபடலாம். பொங்கு சனீஸ்வரரை ஆத்மார்த்தமாக வழிபட்டு வந்தால், சனி பகவான் நன்மைகளை வாரி வழங்குவார்.

முக்கியமாக, மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள். சங்கடங்களையெல்லாம் தீர்த்து அருளுவார். காரியத்தடைகளைச் செய்யாமல் காரியத்தில் துணை நின்று அருளுவார் சனி பகவான்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x