Last Updated : 02 Nov, 2020 06:07 PM

 

Published : 02 Nov 2020 06:07 PM
Last Updated : 02 Nov 2020 06:07 PM

குருப்பெயர்ச்சி ; குருவருளைப் பெற குரு காயத்ரி, குரு கவசம், அகல்விளக்கு வழிபாடு! 

குருப்பெயர்ச்சி வரவிருக்கும் வேளையில், குருவருளைப் பெறுவதற்கு குருவை நினைத்து வியாழக்கிழமைகளில் அகல் விளக்கேற்றி வழிபடுங்கள். குரு பகவான் காயத்ரி சொல்லி வழிபடுங்கள். குரு கவசம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்யுங்கள். குரு தோஷமும் விலகும். குரு யோகமும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

ஒன்பது கிரகங்களால் கொண்டதுதான் நம்முடைய வாழ்க்கை. கிரகங்களால் தோஷங்கள் வந்தால், குரு பகவானைச் சரணடைந்து வேண்டிக்கொண்டால் போதும்... சகல கிரகங்களின் தோஷங்களையும் போக்கியருளுவார் குரு பகவான்.

ஆனால், குருபகவானின் தோஷமே நமக்கு வந்து விட்டால் என்ன செய்வது? கவலையே படாதீர்கள். மற்ற கிரகங்களின் தோஷங்களையே போக்கக் கூடிய குரு பகவான், தன் மூலமான தோஷத்தைப் போக்காமலா போய்விடுவார்.

அதேசமயம் குரு என்ற முறையில் நமக்கு நல்ல பாடங்களையும் கற்று தருவார். நவக்கிரகங்களில் வியாழ பகவான் தான் குரு பகவான். இவர்தான் புத்திரகாரகன். நம் புத்தியைத் தெளியவைப்பவரும் இவர்தான். திருமணத்தை வியாழ நோக்கம் என்பார்கள். எனவே திருமண வரத்தைத் தந்தருளுபவரும் இவரே! குருவருள் இருந்தால்தான் திருமண யோகம் கைகூடும் என்கிறது புராணம்.

குரு பகவானின் தோஷம் இருந்தால், குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிப்படையும். பிள்ளைகள் ஒருபக்கம், பெற்றோர் ஒருபக்கம் என தனித்தனியே இருக்கும் நிலை ஏற்படும். வியாழ பகவானின் தோஷத்தால், ஞாபக மறதிக்கும் ஆளாக நேரிடும். வயிற்றில் பிரச்சினைகள் ஏற்படும். பரம்பரை வியாதிகளின் வீரியம் அதிகமாகும். செயலில் மந்த நிலை ஏற்படும். பெண்களுக்கு கருப்பையில் கோளாறுகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் அடிக்கடி ஏற்படும் நிலை உருவாகும்.

குருவின் அருளைப் பெற, குரு பகவானின் கருணையைப் பெற எளிய வழிகளைச் சொல்லியிருக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

வியாழன் என்பவர் குரு பகவான். குரு என்பவர் தேவ குரு. நவக்கிரக குரு என்பவர் வியாழ பகவான் எனப்படுகிற பிரகஸ்பதி. குருவுக்கெல்லாம் குருவாக இருப்பவர் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. வியாழக்கிழமைகளில், காலை வேளையில் சூர்யோதய வேளையில், குளித்துவிட்டு, வீட்டுப்பூஜையறையில், ஐந்து அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவது குரு பலத்தை வழங்கும்.

தொடர்ந்து, ஒவ்வொரு வியாழக்கிழமையும் குரு வழிபாடு செய்வதும் அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று குரு தட்சிணாமூர்த்தியையும் நவக்கிரக குரு பகவானையும் தரிசித்து பிரார்த்தனை செய்வதும் நல்ல பலன்களை வழங்கும்.

விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வேண்டிக்கொள்வதும் வேண்டிய வரங்களையெல்லாம் தரும். தங்கம் சேர்க்கப்பட்ட ஆபரணத்தை அணிந்துகொள்வதாலும் குருவின் யோகத்தை அடையலாம் என்கிறார்கள். கோயில் யானைக்கு வாழைப்பழம் அளித்து வணங்குவதும் வளம் சேர்க்கவல்லது.

குரு பகவான் காயத்ரி சொல்லி வழிபடுங்கள். குரு தட்சிணாமூர்த்தி அஷ்டகம் பாராயணம் செய்வதும் குரு யோகத்தை வாரி வழங்கும்.

வியாழக்கிழமைகளில், குரு பகவானுக்கு பூஜைகள் செய்து வணங்கிவிட்டு, இரண்டு பேருக்கேனும் லட்டு வழங்குங்கள்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம், திருச்சி திருப்பட்டூர், திருச்சி உத்தமர் கோவில், தஞ்சாவூர் தென்குடித் திட்டை, ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், திருச்செந்தூர் முருகப் பெருமான் கோயில், மகான்கள் சமாதி கொண்டிருக்கிற ஆலயங்கள் முதலான திருத்தலங்களுக்குச் சென்று தரிசித்து வருவதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.
குருவின் யோகம் பரிபூரணமாகக் கிடைத்து குருவருளுடன் திருவருளும் பெற்று வாழலாம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x