Published : 04 Oct 2019 02:36 PM
Last Updated : 04 Oct 2019 02:36 PM

கல்வியும் செல்வமும் தரும் சரஸ்வதி பூஜை

வி.ராம்ஜி

சரஸ்வதி பூஜை நன்னாளில், வீடுகளிலும் அலுவலகங்களிலும் பூஜைகள் செய்து ஸ்ரீசரஸ்வதிதேவியை வழிபடுவார்கள். இந்தநாளில், மகாசக்தியுடன் திகழும் அம்பிகையைக் கொண்டாடி வணங்கினால், சகல சம்பத்துக்களும் கிடைத்து, இனிதே வாழலாம் என்பது ஐதீகம்.

வழிபடுவதற்கு முன்னதாக, பூஜை செய்யும் இடத்தை கழுவி, துடைத்து சுத்தம் செய்யவேண்டும். லேசாக சந்தனம் தெளிக்கலாம். பூஜை மேடையை சந்தனம் மற்றும் குங்குமம் இடவேண்டும்.

சரஸ்வதிதேவியின் திருவுருவப் படத்துக்கோ அல்லது விக்கிரகத்துக்கு முன்பாக, அம்பாளுக்கு எதிரில், படைப்பதற்கு வைக்கவேண்டிய புத்தகங்கள், பேனா ஆகியவற்றுக்கு சந்தனம் குங்குமம் இட்டு அடுக்கி வைக்கவேண்டும்.

அடுத்து, அம்பாளுக்கும் புத்தகங்களுக்கும் பூக்களைச் சொரியவேண்டும். மாலை அணிவித்து தேவியை அலங்கரிக்கலாம்.

நைவேத்தியத்துக்காகப் படைக்கப்படும் உணவை, இலையில் வைத்துக் கொள்ளவேண்டும். சுண்டல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் முதலானவற்றை நைவேத்தியமாகப் படைப்பது சிறப்பு வாய்ந்தது. மேலும், பொரி, கடலை, அவல், நாட்டுச் சர்க்கரை மற்றும் பழங்களையும் படையலுக்கு வைக்கலாம்.

அன்னை சரஸ்வதிதேவிக்கு, செம்பருத்தி, ரோஜா, செவ்வரளி, வெண்தாமரை முதலான மலர்களைப் பூஜைக்குப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு மலருக்கும் ஓர் சக்தி உண்டு. அந்தந்த மலர்களைக் கொண்டு அர்ச்சித்தாலோ அலங்கரித்தாலோ அவற்றுக்கு உரிய பலன்களைப் பெறலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, முதலில் விநாயகப் பெருமானுக்கு பூஜைகள் செய்துவிட்டு, கலைவாணியை ஆராதிக்கவேண்டும்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதமிருந்து அம்பிகையை வணங்க இயலாதவர்கள், சரஸ்வதி பூஜை நன்னாளில் விரதம் இருந்து வணங்கி வேண்டிக் கொண்டால், அம்பிகையின் பேரருள், நம் இல்லத்தில் நிறைந்திருக்கும். கல்வியும் செல்வமும் கிடைக்கப் பெற்று, சகல செளபாக்கியங்களுடன் வாழலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x