Last Updated : 11 Jun, 2015 01:30 PM

 

Published : 11 Jun 2015 01:30 PM
Last Updated : 11 Jun 2015 01:30 PM

வேலையும் ஓய்வும்

சீனாவில் நடந்ததாகக் கூறப்படும் பழங்கதை இது. லா வோட்சுவின் சீடரான 90 வயது முதியவர் ஒருவர் தன் வீட்டுக்கிணற்றில் தனது இளம்வயது மகனுடன் சேர்ந்து கஷ்டப்பட்டு நீர் இறைத்துக்கொண்டிருந்தார்.

அந்த வழியே ஞானி கன்பூசியஸ் வந்தார். கன்பூசியசும் லாவோட்சுவும் சமகாலத்தவர்கள். ஆனால் இருவரது சிந்தனைகளும் வேறுபட்டவை. மேற்குலகம் கன்பூசியசின் சிந்தனைகளை முன்னதாகவே அடையாளம் கண்டது. ஆனால் லாவோட்சுவின் சிந்தனைகள் சமீப காலமாகவே அங்கீகரிக்கப்படத் தொடங்கியுள்ளன.

ஒரு முதியவரும் அவருடைய மகனும் சிரமப்பட்டு தண்ணீரைக் கிணற்றில் இறைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார் கன்பூசியஸ். அந்தத் தந்தை, மகனின் மீது இரக்கம் கொண்டார் கன்பூசியஸ். அவர்களிடம் சென்று, “நீங்கள் என்ன முட்டாள்களா? உலகம் நவீனமாகிவிட்டது. குதிரைகளும், காளைகளும் இந்த வேலையைச் செய்வதற்கு வந்துவிட்டது உங்களுக்குத் தெரியாதா? ஏன் நீயும் சிரமப்பட்டு இந்த இளைஞனின் ஆற்றலையும் வீணாக்குகிறாய்” என்று கேட்டார்.

அந்த முதியவர், கன்பூசியஸிடம், “எனது மகன் இருக்கும்போது இதைப் பேசவேண்டாம். அவன் மதிய உணவுக்குப் போன பின்னர் கேளுங்கள். நான் உங்கள் கேள்விக்கான பதிலைச் சொல்கிறேன்” என்றார்.

அந்த இளைஞன் மதிய உணவுக்காக வீட்டுக்குள் சென்றான். அப்போது கன்பூசியசின் கேள்விக்கு அந்த 90 வயது முதியவர் விடையளித்தார்.

“ எனக்கு இப்போது 90 வயது கடந்துவிட்டது. 30 வயதுள்ள இளைஞன் ஒருவனுடன் என்னால் சரிக்குச் சமமாக வேலை செய்யமுடிகிறது. நான் தண்ணீர் இறைப்பதற்காகக் குதிரைகளைப் பயன்படுத்தினால் என் மகன், எனது ஆரோக்கியத்துடன் 90 வயது வரை எப்படி இருக்க முடியும்? அதனால்தான் உங்களிடம் என் மகன் முன்னால் இக்கேள்வியைக் கேட்க வேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டேன்.

இது ஆரோக்கியத்துடன் தொடர்புடைய விஷயம். நகரங்களில் தண்ணீரை இறைக்க குதிரைகள் வந்துவிட்டதாகக் கேள்விப்பட்டோம். இந்த வேலைகளுக்காக இயந்திரங்களும் கிடைக்கும் செய்தி எனக்குத் தெரியும். ஆனால் அந்த இயந்திரங்கள் வந்துவிட்டால் என் மகனுக்குச் செய்வதற்கு என்ன வேலை இருக்கும்? அவனது உடல் நலம் என்ன ஆரோக்கியத்துடன் இருக்கும்?” என்று கேட்டார்.

ஒரு செயலின் தாக்கம் இன்னொன்றின் மீது உடனடியாக இருக்கும்.

இதைத்தான் லாவோட்சு சொல்கிறார். “ வேலையும் ஓய்வும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதது. நீங்கள் நன்றாக இளைப்பாற ஆசைப்பட்டால் நன்கு வேலை செய்யுங்கள்” என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x