Published : 10 Aug 2017 10:34 AM
Last Updated : 10 Aug 2017 10:34 AM
ம
ரவட்டை நூறு கால்களால் நடக்கக் கூடியதென்று உங்களுக்குத் தெரியும். ஒரு நாள் தவளை ஒன்று அந்த மரவட்டையைத் தற்செயலாகச் சந்தித்தது. அதற்கு ஒரே குழப்பம். தன்னால் நான்கு கால்களை வைத்துக்கொண்டே ஒழுங்காக நடக்க முடியவில்லை என்று நினைத்தது. நூறு கால்களில் நீ நடப்பது அற்புதம்தான் என்று மரவட்டையிடம் சொன்னது.
“எந்தக் காலை முதலில் நகர்த்துவாய்? அடுத்தடுத்து எப்படி எட்டு எடுத்து வைக்கிறாய்? நான் ஒரு தத்துவவாதி. உனது நூறு கால்கள் என்னை வியக்கவைக்கின்றன. நீ எப்படி நடக்கிறாய். எப்படி இந்த நூறு கால்களைச் சமாளிக்கிறாய்? எனக்குத் தீராத ஒரு புதிராக இந்த விஷயம் ஆகிவிட்டது” என்றது.
மரவட்டை பதிலளித்தது. “நான் இத்தனை காலமாக நடந்துகொண்டிருக்கிறேன். ஆனால், இதைப் பற்றி யோசித்துப் பார்த்ததேயில்லை. நான் உங்கள் கேள்விக்கான பதிலைப் பிறகு சொல்கிறேன்” என்று கூறி விடைபெற்றுக் கொண்டது.
தான் நூறு கால்களில் நடக்கிறோம் என்ற உணர்வு முதல்முறையாக மரவட்டையின் மனதில் தொற்றிக்கொண்டது. தவளை கேட்ட கேள்வி சரிதான். மரவட்டையால் நிற்கவும் முடியவில்லை; நகரவும் முடியவில்லை. கீழே விழுந்தும் விட்டது. அப்போது அந்த வழியாகக் கடந்து சென்ற தவளையிடம் சொன்னது: “இனி மறந்தும் இன்னொரு மரவட்டையிடம் என்னிடம் கேட்ட கேள்விகளைக் கேட்காதே.
நான் என் வாழ்க்கை முழுக்க எந்தப் பிரச்சினையும் இன்றி நடந்துகொண்டிருந்தேன். தற்போது என்னை முழுவதுமாகச் சாகடித்துவிட்டாய். என்னால் நகரவே முடியவில்லை. நூறு கால்களையும் நான் நகர்த்த வேண்டும். எப்படி அதை நிர்வகிக்கப் போகிறேன்” என்று சொல்லி வருந்தியது மரவட்டை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT