Published : 10 Aug 2017 10:27 AM
Last Updated : 10 Aug 2017 10:27 AM
இ
ன்றைய கட்டிடவியல் வல்லுநர்களும் அறிவியல் அறிஞர்களும் வியக்கும் பிரம்மாண்டமான படைப்பு கம்போடியாவின் அங்கோர்வாட் ஆலயம். 500 ஏக்கரில் பரந்திருக்கும் இந்தக் கோயிலை ஒரு கலைப் பொக்கிஷம் என்று கூறலாம். கோயிலைச் சுற்றிலும் பிரம்மாண்ட அகழி, மதில் சுவர், உயர்ந்து நிற்கும் கோபுரங்கள், திரும்பிய பக்கம் எல்லாம் சிற்பங்கள் என அதிசயமாகக் காட்சியளிக்கிறது.
இந்தக் கோயிலின் ஒரு பக்கச் சுற்றுச் சுவரின் நீளம் மூன்றரை கிலோமீட்டர். இந்தக் கோயிலுக்குள் நம் தமிழகத்து ஸ்ரீரங்கம் கோயிலைப் போன்று 20 கோயில்களை அடைக்கலாம். இக்கோயிலை முழுமையாகப் படம்பிடிக்க வேண்டுமென்றால், பூமியிலிருந்து சுமார் 1000 அடி மேலே சென்று வானத்திலிருந்து படம் எடுத்தால் மட்டுமே முடியும். அந்தக் காலத்தில் இது வெறும் 27 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இத்தனை பிரம்மாண்டமான கனவு ஆலயத்தை எழுப்பியவர் இரண்டாம் சூரியவர்மன். இக்கோயிலை மேலிருந்து பார்க்கும்போது மூன்று அடுக்குகளாகத் தோற்றமளிக்கிறது.
முதல் அடுக்கில் உள்ள சுவரில் ராமாயணம், மகாபாரதக் காட்சிகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாம் அடுக்கின் நான்கு திசைகளிலும் பெரிய சதுர வடிவத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. மூன்றாம் அடுக்கில் விண்ணை நோக்கி உயர்ந்துள்ள ஐந்து கோபுரங்களாகக் காட்சி தருகிறது. மேலும், இக்கோயிலுக்கு மிகப் பெரிய நான்கு நுழைவுவாயில்களும் உள்ளன.
தேசியக் கொடியில் அங்கோர்வாட்
கெமர், திராவிடக் கலைகளைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதால் கம்போடிய அரசின் தேசியக் கொடியில் தேசியச் சின்னமாகப் பொறிக்கப்பட்டுள்ளது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இரண்டாம் சூரியவர்மன் அங்கோர் வாட்டை முதலில் ஒரு விஷ்ணு கோயிலாகத் தான் கட்டினார்.
சூரியவர்மன் இறந்த பிறகு ஆட்சிக்கு வந்த ஏழாம் ஜெயவர்மன் இதை பவுத்தக் கோயிலாக மாற்றினார். 1992-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு அங்கோர் வாட்டை உலக மரபுச் சின்னமாக அறிவித்ததுடன், அதிகம் சிதைவுறாமல் பராமரித்தும் வருகிறது. உலகிலேயே மிகப் பெரிய கலைவடிவமாகக் கருதப்படும் இக்கோயிலை பார்க்க, ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கில் மக்கள் வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT