Published : 26 Feb 2015 10:20 AM
Last Updated : 26 Feb 2015 10:20 AM

வார ராசிபலன் 26-2-2015 முதல் 4-3-2015 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு சூரியன், புதன், சுக்கிரன்,‎ ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். இதனால் அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். தந்தையாலும், பிள்ளைகளாலும் அனுகூலம் உண்டாகும். முக்கியஸ்தர்கள் ஆதரவாக இருப்பார்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பண வரவு அதிகரிக்கும்.

நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பால் மன மகிழ்ச்சி பெறுவீர்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பயணம் சம்பந்தமான இனங்கள் லாபம் தரும். வியாபாரிகளுக்கும் கணிதத் துறையாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் மாணவர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். தகவல் தொடர்பு துறையைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்புக் கூடும். 8-ல் சனியும் 12-ல் செவ்வாய், கேது ஆகியோரும் உலவுவதால் அலைச்சலும் உழைப்பும் அதிகமாகும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனம் தேவை. இயந்திரப்பணியாளர்களும் விவசாயிகளும் பொறுப்புடன் செயல்பட்டால் நஷ்டப்படாமல் தப்பலாம்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 1, 2, 4.

திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, புகை நிறம், இளநீலம்.

எண்கள்: 1, 4, 5, 6. ‎

பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும். ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்யவும்.



ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 10-ல் சூரியனும், 11-ல் செவ்வாயும் சுக்கிரனும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். பெரியவர்கள், தனவந்தர்கள், மேலதிகாரிகள் உதவி புரிவார்கள். புதிய சொத்துகளையும் பொருட்களையும் வாங்குவீர்கள். அரசாங்கப் பணிகள் ஆக்கம் தரும்.

இயந்திரப்பணியாளர்களுக்கு இன்ஜினீயர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். திரவப்பொருட்கள் லாபம் தரும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். விளையாட்டு விநோதங்களில் வெற்றி கிடைக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். 4-ம் தேதி முதல் புதன் 10-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மாணவர்களது நிலை உயரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு அதிகமாகும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 1, 2, 4.

திசைகள்: வடமேற்கு, தெற்கு, கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 6, 7, 9.

பரிகாரம்: துர்கா கவசம் படிப்பது நல்லது.



மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் சனியும், 8-ல் புதனும் 10-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவதால் சுப காரியங்களுக்காகச் செலவு செய்வீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் வளர்ச்சி காண்பார்கள். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கூடும். கடல் சம்பந்தமான தொழில் லாபம் தரும்.

எதிர்ப்புகள் விலகும். தொழிலாளர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டு பயன் பெறச் சந்தர்ப்பம் உருவாகும். வாரப்பின்பகுதியில் பண வரவு அதிகமாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். அலைச்சல் வீண்போகாது. இயந்திரப்பணியாளர்களுக்கும் இன்ஜினீயர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். பெரியவர்களது ஆசி கிடைக்கும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 1, 2, 4.

திசைகள்: வடமேற்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 7, 8, 9.

பரிகாரம்: துர்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.



கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 9-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். நீண்ட நாட்களாக எண்ணியிருந்த ஒரு காரியம் வார முன்பகுதியில் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். பயணத்தாலும், பயணம் சம்பந்தமான இனங்களாலும் ஆதாயம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பெண்களால் அனுகூலம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். 5-ல் சனியும், 9-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவதால் மக்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு, விலகும். சூரியன் 8-ல் இருப்பதால் உஷணாதிக்கம் அதிகமாகும். கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். தந்தையால் மன வருத்தம் உண்டாகும். அரசுப்பணிகளில் விழிப்புத் தேவை. 4-ம் தேதி முதல் புதன் 8-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு மந்தநிலை விலகும். மாணவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பு மன மகிழ்ச்சி தரும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: பிப்ரவரி 27 (முற்பகல்), மார்ச் 2, 4.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், இளநீலம்.

எண்கள்: 4, 6.

பரிகாரம்: சூரிய வழிபாடு அவசியம்.



சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் புதனும், 8-ல் சுக்கிரனும், 12-ல் வக்கிர குருவும் உலவுவதால் வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறும். தொழில் ரீதியாக ஓரிரு நன்மைகள் உண்டாகும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். கலைஞர்கள் தகுதிக்குரிய வகையில் வளர்ச்சி காண்பார்கள். பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் சில சலசலப்புகள் உண்டாகும். பேச்சிலும் உணவுப் பழக்கத்திலும் கட்டுப்பாடு தேவை. 8-ல் செவ்வாயும், கேதுவும் இருப்பதால் எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. உடன்பிறந்தவர்களது நலனில் அக்கறை தேவை. பிறரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியம். கோபம் கூடாது. வாரப் பின்பகுதியில் சுப காரியச் செலவுகள் செய்ய வேண்டிவரும். பிள்ளைகள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய நேரிடும். பிற மொழி, மத, இனக்காரர்களை நம்பி முக்கியப் பொறுப்புகளையும் பணத்தையும் ஒப்படைக்க வேண்டாம். 4-ம் தேதி முதல் புதன் 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 1, 2, 4.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: இளநீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6.

பரிகாரம்: துர்கை, விநாயகருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. சனிப் பிரீதி செய்து கொள்ளவும்.



கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 6-ல் சூரியனும், 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தொழில் ரீதியாக வளர்ச்சி காணலாம். அரசு விவகாரங்களில் அனுகூலமான திருப்பம் உண்டாகும். நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். பொருளாதார நிலை திருப்தி தரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும்.

தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். அலைச்சல் சற்று கூடவே செய்யும். 7-ல் செவ்வாய், சுக்கிரன், கேது ஆகியோர் உலவுவதால் கணவன்-மனைவி உறவு நிலை பாதிக்கும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கூட்டாளிகளை நம்பி முக்கியப் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டாம். பயணத்தின்போது கவனம் தேவை. பெண்களால் சங்கடம் ஏற்படும் என்பதால் விழிப்புடன் இருப்பது நல்லது. 4-ம் தேதி முதல் புதன் 6-ம் இடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். மாணவர்களது திறமை பளிச்சிடும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர், கணிதம், எழுத்து, பத்திரிகை துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: மார்ச் 1, 2.

திசைகள்: வடக்கு, மேற்கு, கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5, 8.

பரிகாரம்: செவ்வாய், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x