Last Updated : 15 Sep, 2016 12:06 PM

 

Published : 15 Sep 2016 12:06 PM
Last Updated : 15 Sep 2016 12:06 PM

இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை

பக்ரீத் சிறப்புக் கட்டுரை

“இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை விளைவாக பிறந்தவன்தான் நான்!” என்கிறார் ஒருமுறை நபிகளார்.

“எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும், உனக்கு முற்றிலும் வழிபடுபவர்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் வழித்தோன்றல்களிலிருந்து முற்றிலும் உனக்குக் கீழ்ப்படிந்து வாழும் ஒரு சமூகத்தைத் தோற்றுவிப்பாயாக! மேலும், இந்த மக்களுக்காக இவர்களிலிருந்தே ஒரு தூதரை தேர்ந்தெடுப்பாயாக! அவர் உன்னுடைய வசனங்களை மக்களுக்கு ஓதிக் காட்டுபவராகவும், வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பவராகவும், அவர்களை தூய்மைப்படுத்து பவராகவும் திகழச் செய்வாயாக”. இப்ராஹீம் நபி மற்றும் அவரது மகன் இஸ்மாயில் செய்த பிரார்த்தனை இது.

இந்தப் பிரார்த்தனைக்கும், நபிகளாரின் வருகைக்கும் இடைப்பட்ட காலம் சுமார் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள். புத்தம்புதிய சமூக அமைப்பொன்றை நிர்ணயிக்கவே இந்த நீண்ட நெடிய காலத்தை இறைவன் நிர்ணயித்தான்.

இறைவனின் திட்டப்படி இப்ராஹீம் நபி, நாகரீகத்தின் தொட்டிலாக இருந்த ஈராக்கிலிருந்து புலம்பெயர்ந்து மனித சஞ்சாரமேயற்ற ஒரு புற்பூண்டும் முளைக்காத, உலகின் மொத்தப் பகுதிகளோடும் துண்டிக்கப்பட்ட அரபு நாட்டின் பகுதியான பாலை நிலப்பரப்பில் மனைவி, மக்களான ஹாஜிரா இஸ்மாயீலோடு குடியேறினார்.

2500 ஆண்டுகள் இடைவெளி

மனித இனத்தை நெறிப்படுத்த வேண்டிய கடினமான பணி அது. அதுவரையிலான பண்பாடுகள் தோல்வியுற்ற நிலையில் இந்தப் பணியை கையிலெடுக்க வேண்டிய நிலை. இந்த தோல்விகளிலிருந்து படிப்பினைப் பெற்று பற்பல தலைமுறைகளைத் தாண்டி அதுவரையும் நிலவி வந்த ஒழுக்கச் சீர்கேடுகளின் சாயலே இல்லாத முற்றிலும் புத்தம் புதிய உயரிய நிலையுடைய பண்பாட்டைத் தோற்றுவித்தலுக்கான இடைவெளிதான் இந்த நீண்ட நெடிய 2500 ஆண்டுகள்.

இப்ராஹீம் நபி பாலையில் கால் வைத்தபோது, காய்ந்த சருகுகள், தீய்ந்த தாவரங்கள் தவிர அவரை கைநீட்டி வரவேற்க வேறு ஆளில்லை. அந்த மாபெரும் இறைத்தூதரையும் அவரது குடும்பத்தாரையும் வரவேற்க அங்கு யாருமேயில்லை. தாகித்த பாலகனுக்கு நீருட்ட அன்னை ஹாஜிரா சபா, மர்வா மலைக்குன்றுகளுக்கு இடையே ஓடியோடி நீர்தேடி களைத்து நின்ற துயரச்சம்பவம் நடந்த இடம் அதுதான். கடைசியில், குழந்தை இஸ்மாயீலின் கை,கால்பட்டு வற்றாத ஜம், ஜம் நீரூற்று பீரிட்டது. இதுவரையிலும் அந்த அற்புத நீரூற்று லட்சபோப லட்சம் மக்களின் தாகத்தைத் தணித்துக் கொண்டிருக்கிறது.

சொந்தபந்தங்கள், நாடு, நகரம் என்று அனைத்தையும் இழந்து பாலைவெளியில் குடியேறிய இப்ராஹீம் நபிக்கு முதுமையில் பெயர் சொல்ல பிறந்த இஸ்மாயீல் சிறுவனானபோது, மீண்டும் ஒரு சோதனை வந்தது. குழந்தையையே பலிகேட்டு வந்த சோதனை கடைசியில் பதிலியாக வந்த ஆடால் தீர்க்கப்பட்டது.

இளைஞர் இஸ்மாயீல் வளர்ந்து ஜம், ஜம் நீரூற்று பெருக்கெடுத்த பகுதியிலேயே ஜுர்ஹும் கோத்திரத்துப் பெண்ணை மணந்து நிரந்தரமாக தங்கிவிட்டார். அரேபிய பாலைவனத்தில் இஸ்மாயீலின் சந்ததிகள் இப்படிதான் பல்கிப் பெருகினர்.

பண்பாளர் பிறந்தார்

இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்ட நேரம் அது. மக்காவின் பனு ஹாஷிம் கோத்திரத்தைச் சேர்ந்த வஹப் இப்னு அப்து மனாப்பின் மகளான ஆமினாவின் வயிற்றில் குழந்தை முஹம்மது சூல் கொண்ட அருளுக்குரிய தருணம். மாய, மந்திர அற்புதங்கள் ஏதும் நிகழ்த்தாமல் உலகைப் புரட்டிப்போடும் ஒரு மாபெரும் பணிக்காக “அல்முருஅ” என்ற அடைமொழியால் குழந்தை முஹம்மது அடையாளப்படுத்தப்பட்டது. மிக உயரிய பண்பாளரை அரபு நாட்டினர் குறிக்கும் விளிப்பு இது.

இப்ராஹீம் நபியின் பிரார்த்தனையாக முஹம்மது நபிகளார் (ஸல்) ஜனித்தார். தமது வாழ்நாளுக்குப் பின்னாலும் மனித இனத்துக்கான சீர்த்திருத்தம் என்ற அந்த அரும்பணியை தாங்கிச் செல்லும், தோழர், தோழியர் கொண்ட தோழமைக் குழுவினரை நபிகளார் உருவாக்கினார்.

ஆரம்பத்தில் மிகவும் சொற்ப எண்ணிக்கையிலிருந்த இவர்கள்தான் முழு அரபுலகின் பிரதிநிதிகளாக விளங்கினார்கள். நபிகளாரின் வாழ்வியல் சீர்த்திருத்த அரும்பணிக்காக அனைத்தையும் இழக்க முன்வந்தார்கள். “எங்கள் திருத்தூதர் பாதங்களில் ஒரு சிறுமுள் தைக்கவும் அனுமதியோம்!” என்று தங்கள் உயிரை அர்ப்பணிக்கவும் தயாரானார்கள்.

நபிகளாரின் லட்சிய சமூகத்தின் குழிக்கற்களானார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x