அரோகரா கோஷம் அதிர திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்!

அரோகரா கோஷம் அதிர திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்!
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இன்று (மே8) நடைபெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷம் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூர்த்தி நாயனார், தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும், தமிழகத்தில் 3-வது பெரிய தேர் கொண்டதாகவும் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் திருத்தலம் விளங்குகிறது.

இக்கோயில் சித்திரை தேர்த் திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, நாள்தோறும் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதி உலா ஆகியவை நடைபெறுகின்றன.புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளி அருள்பாலித்தனர். வியாழக்கிழமை காலை அவிநாசியப்பர் திருத்தேர் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அரோகரா கோஷம் முழங்க, திருப்பூர் சிவனடியார்கள் கைலாய வாத்தியத்துடன் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.

இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேரில் சோமாஸ்கந்தர் சொர்ண அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெற்கு ரதவீதி கோவை பிரதான சாலையில் தொடங்கிய அவிநாசியப்பர் தேரோட்டம், மேற்குரதவீதி வழியாக வந்து, வடக்கு ரதவீதி வளைவில் மதியம் நிறுத்தப்பட உள்ளது. தேரோட்டத்தின் போது, பல்வேறு அமைப்பினர் சார்பில் பக்தர்களுக்களுக்கு நீர் மோர், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் ஏராளமான போலீஸôர் ஈடுபட்டிருந்தனர்.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கரிவரதராஜ பெருமாள் ஆகிய திருத்தேர் வடம் பிடித்தல், தேரோட்டம், நிலை சேருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தெப்பத் தேர் உற்சவம் 12 ஆம் தேதி இரவும், நடராஜப் பெருமான் மகா தரிசனம் 13 ஆம் தேதியும், தேர்த் திருவிழாவின் நிறைவாக மஞ்சள் நீர், இரவு மயில் வாகனக் காட்சி 14-ம் தேதியும் நடைபெறுகின்றன.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், துணைஆணையர் ஹர்ஷினி, கோயில் செயல் அலுவலர் சபரிஷ்குமார், அறங்காவலர் குழுத் தலைவர் ஏ. சக்திவேல், அறங்காவலர்கள் பொன்னுசாமி, ஆறுமுகம், விஜயகுமார், கவிதாமணி ஆகியோர் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in