Last Updated : 05 Apr, 2018 10:53 AM

 

Published : 05 Apr 2018 10:53 AM
Last Updated : 05 Apr 2018 10:53 AM

கிறிஸ்துவின் தானியங்கள்: எது அதிகாரம், எது ஆன்மிகம்?

எருசலேமில் தோன்றி மறைந்த இறைவாக்கினர்களில் முக்கியமானவர் எசாயா. சமயம் என்ற பெயரால் எசாயாவின் காலத்திலும் மக்களை மிகவும் துன்புறுத்தி அவர்களைக் கீழ்நிலையில் அதிகார வர்க்கத்தின் ஒரு பகுதியினராக இருந்த மதத் தலைவர்கள் வைத்திருந்தனர். இது குறித்து இறைவாக்கினர் எசாயா தனது காலத்தில் இப்படி வருந்தி எழுதினார்.

‘எருசலேமே, உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும், கடவுளுக்கு எதிராய்த் தீய வழியில் வாழ்ந்த சோதோம் கொமோரா நகரங்களை நினைவுபடுத்துகிறவர்களாய் இருக்கின்றனர்; நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்; அவர்தம் கட்டளைக்குச் செவி சாயுங்கள். உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமையை விட்டொழியுங்கள்; நன்மைசெய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள்.

“வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்” என்கிறார் ஆண்டவர்; “உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும்; ரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன; எனினும் பஞ்சைப் போல் அவை வெண்மையாகும். மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால், நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள். மாறாக, இணங்க மறுத்து எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்; ஏனெனில் ஆண்டவர்தாமே இதைக் கூறினார்” என்று எச்சரிக்கிறார்.

மத்தேயு எழுதிய நற்செய்தி

எசாயா காலத்தில் இருந்த நிலை, இயேசுவின் காலத்திலும் நீடித்ததை அவர் வார்த்தைகளில் இருந்தே நாம் தெரிந்துகொள்ள முடியும். மதம் என்ற பெயரால் அதிகாரத்தில் இருந்தவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள், அவர்களை முன்மாதிரிகளாகக் கொள்ள வேண்டாம் என்று மக்களிடம் இயேசு கண்டிப்புடன் எடுத்துக் கூறியிருக்கிறார். இதை மத்தேயு எழுதிய நற்செய்தியில் வாசிக்கலாம் (மத்தேயு 23: 1-12).

அக்காலத்தில் இயேசு, மக்கள் கூட்டத்தையும் தம் சீடர்களையும் பார்த்துக் கூறினார், “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள்.

ஆனால், அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில், அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமக்க முடியாத சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால், அவர்கள் அதைத் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வர மாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ‘போதகரே’ என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.

ஆனால், நீங்கள் அவர்களை ‘போதகரே’ என அழைக்க வேண்டாம். ஏனெனில், உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதர, சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் என இவர்களை அழைக்க வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.” என்றார்.

இன்றும் தொடரும் யதார்த்தம்

அன்று இருந்தது போலவே அடிமை வர்க்கம், ஆளும் வர்க்கம் ஆகிய இரண்டுவிதமான வர்க்கங்கள் இன்றைய நவீன உலகிலும் இருக்கின்றன. முடியாட்சியில் அரசர்கள், மக்களைத் தங்களது அடிமைகளாக எண்ணினர். அதிகாரவர்க்கத்தினருக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் குடிமக்கள் என்று அவர்கள் எண்ணினார்கள். மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்தாலும் காட்சிகள் இன்னும் பெரிதாக மாறவே இல்லை.

shutterstock_73393228right

அதிகாரத்தில் அமரும் வாய்ப்பை மக்கள் தரும்போது அவர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பும் பணியும் தனிப்பட்ட முறையில் அனுபவிப்பதற்கு அல்ல, அது மக்களுக்கு நன்மை செய்வதற்குப் பயன்படுத்தப்படுவது. சமூகத்தையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த, கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும் என்று இயேசு தனது போதனையின் வழியாகச் சுட்டிக்காட்டுகிறார்.

அதேபோல சமயம் என்பது கடவுளுடனான உறவு மட்டுமல்ல; மனிதர்களுடனான உறவும்கூட. சமயம் என்ற பெயரில் பரிசேயர்களும் சதுசேயர்களும் செய்த அக்கிரமங்களை இயேசு கடுமையாகச் சாடினார். பள்ளத்திலே வீழ்ந்து கிடக்கிற மக்களைத் தூக்கிவிடுவதாக, சோர்வுற்ற மக்களைத் தேற்றுவதாக சமயம் இருக்க வேண்டும்.

அவர்கள் மேலும் தடுமாறுவதற்குக் காரணமாக இருந்துவிடக் கூடாது. சமயம் என்பது அடிமைத்தளையை உடைத்தெறிந்து விடுதலை தருவதாக அமைய வேண்டும். அவர்களை அடிமைச் சிறைக்குள் அடைப்பதாக இருக்கக் கூடாது. எப்படியெல்லாம் சமயம் இருக்கக் கூடாதோ, அப்படியெல்லாம் அதிகார வர்க்கத்தினர் சமயத்தைத் தங்கள் கைப்பாவையாக்கியிருந்தனர். இந்தத் தவறான கண்ணோட்டத்தைத்தான் இயேசு உடைத்தார். அவர்களை விமர்சித்தார். இதற்காக அவர்களால் கொல்லப்படுவோம் என்பதை அறிந்தே இயேசு இந்தப் பணியைச் செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x