Published : 12 Apr 2018 12:32 PM
Last Updated : 12 Apr 2018 12:32 PM

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: ரிஷபம்

ரிஷப ராசி வாசகர்களே,

பெருந்தன்மையும் சகிப்புத்தன்மையும் கொண்டவர் நீங்கள். உங்கள் ராசிக்கு சந்திரன் லாப வீட்டில் நிற்கும்போது இந்த விளம்பி வருடம் பிறப்பதால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது வேலை அமையும். பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பழைய சிக்கல்களைப் புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள்.

இந்த ஆண்டு ஆரம்பம் முதல் 03.10.2018 வரை குரு பகவான் 6-ம் வீட்டிலேயே மறைந்திருப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்ல வேண்டும். வெளியூருக்குச் செல்லும்போது வீட்டைப் பத்திரமாகப் பூட்டிச் செல்லுங்கள். உங்கள் பெயரைச் சிலர் தவறாகப் பயன்படுத்துவார்கள். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு பகவான் 7-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் தள்ளிப்போன திருமணம் நன்கு நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது.

பிரிந்திருந்தவர்கள் சேர்வார்கள். கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீட்டில் களைகட்டும். மனைவிவழி உறவினருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 8-ல் அமர்வதால் சொந்த ஊரில் இருக்கும் பூர்விகச் சொத்தை அவ்வப்போது சென்று கவனித்து வருவது நல்லது.

31.08.2018 முதல் 01.01.2019 வரை உங்கள் ராசிநாதன் சுக்கிரன், ராசிக்கு 6-ல் மறைவதால் குடும்பத்தில் சின்ன சின்னப் பிரச்சினைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினாலும் அதை எல்லோரும் தவறாகப் புரிந்துகொள்வார்கள். தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி பழுதாகும். விபத்துகள் நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 14.04.2018 முதல் 12.02.2019 வரை கேது பகவான் 9-ல் நிற்பதால் அநாவசியச் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். கடந்த கால இழப்புகளை நினைத்து வருந்துவீர்கள்.

தந்தையாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வழக்கில் வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். ஆனால், ராகு பகவான் 3-ல் நிற்பதால் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சித்தர்கள், ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். 13.02.2019 முதல் வருடம் முடியும்வரை கேது 8-லும், ராகு 2-லும் வந்தமர்வதால் சாதாரணமாகப் பேசினால் கூடச் சண்டையில் போய் முடியும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அவ்வப்போது கண் பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

30.04.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 9-ல் அமர்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். சகோதரர்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். தந்தையாரின் கோபத்துக்கு ஆளாவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். புதுச்சொத்து வாங்குவீர்கள். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவானும் 8-ல் அமர்ந்து அஷ்டமத்துச்சனியாக தொடர்வதால் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வழக்கில் எதிர்தரப்பால் வாய்தா வாங்கி தீர்ப்பு தள்ளிப் போகும். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கிவைப்பது நல்லது. வெளி உணவுகள், வாயுப் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். சொத்து வாங்கும்போது அவசரம் வேண்டாம்.

Rishabamright

வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் ஆடி, ஆவணி மாதங்களில் மீண்டும் வரும். திடீர் லாபம் அதிகரிக்கும். வர வேண்டிய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலியுங்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.

உத்தியோகத்தில் உங்களைத் தரக்குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். ஆர்வம் இல்லாமல் இருந்தீர்களே! இனி விரும்பிப் பணிபுரிவீர்கள். ஆடி, ஆவணி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் வரும். மேலதிகாரி தவறான வழிகளைக் கையாண்டாலும், நீங்கள் நேர்பாதையில் செல்வது நல்லது. உயரதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம்.

நாலாவிதத்திலும் நிம்மதியில்லாமல் அலைக்கழித்த உங்களுக்கு இந்தத் தமிழ்ப் புத்தாண்டு வசதி வாய்ப்புகளையும் மன அமைதியையும் அள்ளித்தரும்.

பரிகாரம்: தஞ்சாவூர் மாவட்டம், திருப்புவனம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ சரபேஸ்வரரை வெள்ளிக்கிழமையில் சென்று வில்வார்ச்சனை செய்து வணங்குங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x