Last Updated : 17 Nov, 2017 12:29 PM

 

Published : 17 Nov 2017 12:29 PM
Last Updated : 17 Nov 2017 12:29 PM

கந்தசஷ்டியில் விரதமிருக்க முடியலையா... அதே பலன் உண்டு... கவலை வேண்டாம்!

ஐப்பசி மாத கந்தசஷ்டியில் விரதம் இருக்க முடியாததற்கு எதுவேண்டுமானாலும் காரணமாக இருக்கும். சிலருக்கு உடல்நலமில்லாமல் இருந்திருக்கலாம். இன்னும் சிலர், வீட்டில் உடல் நலமின்மையால் கஷ்டப்படுவோரை பார்த்துக் கொள்ளவேண்டியிருந்திருக்கும். அவ்வளவு ஏன்... கல்யாணம், காதுகுத்து என விழாக்களுக்கு வெளியூர் செல்ல நேர்ந்திருக்கலாம். இவற்றால் சஷ்டி விரதத்தை விடுவதில் தவறொன்றுமில்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மாறாக, இதோ... கார்த்திகைப் பிறந்துவிட்டது. நாளைய தினம் 18.11.17 சனிக்கிழமை அன்று அமாவாசை. நாளை தொடங்கி, சஷ்டி திதி வரையிலான ஆறுநாட்களும் ஆறுமுகனை நினைத்து விரதமிருக்கலாம். அதனால்தான் இப்போது அமாவாசை தொடங்கி வரக்கூடிய ஆறாம் நாளான சஷ்டியை சுப்ரமண்ய சஷ்டி என்றும் சம்பா சஷ்டி என்றும் போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.

எனவே இந்த நாட்களில் சஷ்டி விரதம் இருந்தால், கந்தசஷ்டியில் விரதம் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ... என்னென்ன புண்ணியங்கள் பெறுவோமோ... அவை அனைத்தையும் பெறலாம் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

ஆகவே, அமாவாசை நாளில் இருந்து சஷ்டி வரையிலான ஆறு நாட்களும் ஆறுமுகனை மனதுருக பிரார்த்தனை செய்து விரதமிருங்கள். இந்த நாட்களில், இயலோதோருக்கு எலுமிச்சை சாதம் தானமாக வழங்குங்கள். எல்லா சத்விஷயங்களும் உங்களை வந்தடையும்படி செய்தருள்வான் வடிவேலன்.

இந்த ஆறுநாளும் கந்தசஷ்டி கவசம் படியுங்கள். முருக நாமங்களைச் சொல்லி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். தினமும் வீட்டில் உள்ள முருகப்பெருமானின் படத்துக்கு மாலையிட்டு, ஏதேனும் அன்னம்... சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், தயிர்சாதம், வெண்பொங்கல், கேசரி முதலான உணவுகளை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். கேட்ட வரம் அனைத்தும் தந்தருள்வான் கதிர்வேலன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x