Last Updated : 27 Oct, 2017 12:34 PM

 

Published : 27 Oct 2017 12:34 PM
Last Updated : 27 Oct 2017 12:34 PM

தோஷம் நீக்கும் வாஸ்து பூஜை!- இனி எல்லாமே சந்தோஷம்தான்!

நிம்மதியும் நிறைவும்தான் எல்லோரின் விருப்பமும் ஆசையும். எதெல்லாம் நிம்மதியைத் தருகிறதோ, எவையெல்லாம் நிறைவைத் தருகிறதோ... அதை அந்தந்த தருணத்தில் செய்துவிட்டாலே... இங்கே சந்தோஷத்துக்குக் குறைவே இல்லை.

வாடகை வீடோ... சொந்த வீடோ... நிம்மதிதான் முக்கியம். வீட்டில் யாருக்கேனும் அடிக்கடி உடல் உபாதைகள் வந்து படுத்தினாலோ, குழந்தைகள் கல்வியில் கொஞ்சம் மந்தமாக இருந்தாலோ, ‘அட... எவ்ளோதான் சம்பாதிச்சாலும், இன்னும் கடனெல்லாம் அடையலியேப்பா...’ என்று புலம்பிக் கொண்டிருப்பவர்களாக இருந்தாலும் கவலையே வேண்டாம்... நாளை 28.10.17 சனிக்கிழமை வாஸ்து பூஜை செய்ய உகந்த நாள். வாஸ்து பகவானுக்கு உரிய அற்புதமான நாள்.

என்ன செய்ய வேண்டும்?

‘’ஹோமம், யாகமெல்லாம் வளர்க்கத் தேவையில்லை. ஒருமணி நேரம், இரண்டு மணி நேரம் பூஜை, மந்திர ஜபம் என்றெல்லாம் செய்யவேண்டும் என்கிற நியதி இல்லை. வீட்டை சுத்தமாக்குங்கள். ஒட்டடை அடித்து, தூசு படிந்த கதவு, ஜன்னல் மூலை, ஷோ கேஸ்... என எல்லா இடங்களையும் சுத்தமாக்குங்கள். பூஜையறையில், ஊதுபத்தி எரிந்து சாம்பலாகிப் போன துகள் துவங்கி, சூடம் ஏற்றி கருப்பேறிவிட்ட தட்டு வரை சுத்தப்படுத்துங்கள்.

வாஸ்து பூஜை செய்ய, 28.10.17 சனிக்கிழமை காலை 7 மணி முதல் 8.30 மணி வரை உகந்த நேரமாகச் சொல்லியிருக்கிறார்கள். வாசலில் கோலமிடுங்கள். நிலைவாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். வாஸ்து புருஷனின் படம் இருந்தால் நல்லது. அப்படியில்லையென்றாலும் தோஷமில்லை. ஏனெனில், வாஸ்து பகவான், ஒவ்வொரு இடத்திலும் நிறைந்திருப்பதாக ஐதீகம்.

வாஸ்து பகவானை மனதில் நினைத்துக் கொண்டு, பூஜை செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல், அவல் பாயசம், கேசரி முதலான இனிப்பு வகைகளை நைவேத்தியமாகப் படைக்கலாம். சாம்பிராணிப் புகையை வீட்டின் எல்லா இடங்களுக்கும் காட்டி, வீட்டின் முச்சந்திப் பகுதியில் சிதறுகாய் உடைப்பது சிறப்பு. இயன்றால், இயலாதவர்களுக்கு உணவு வழங்கி உதவுங்கள். உங்கள் வாழ்வில் வாஸ்து புருஷன் அமர்ந்து கொண்டு, அத்தனை அல்லல்களையும் துடைத்தெடுப்பார். தோஷங்கள் அனைத்தும் விலகி, சந்தோஷங்களைப் பெருகச் செய்வார்’’ என்று சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார் தெரிவித்தார்.

சனிக்கிழமை, சனி பகவானுக்கு உரிய தினம். திருவோண நட்சத்திரம். இது, திருமாலுக்கு உகந்த அற்புதமான நட்சத்திர நாள். எனவே வாஸ்து புருஷனை வணங்கி, ராகுகால வேளையில் கோயிலுக்குச் சென்று, நவக்கிரங்களைச் சுற்றி வந்து, எள் தீபமேற்றுங்கள். மாலையில் பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசியுங்கள். அத்தனை உன்னதங்களும் அமையப் பெறுவீர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x