Published : 14 Mar 2018 10:41 AM
Last Updated : 14 Mar 2018 10:41 AM

மலை எல்லாம் தலை: அரளிப்பாறை மஞ்சுவிரட்டுக்கு மவுசு

மிழகத்தில் அலை அலையாக திரளும் பார்வையாளர் கூட்டத்தால் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுக்கு மவுசு அதிகரித்துள்ளது. கை நிறைய சம்பாதித்தாலும் காளைகளை களத்தில் அடக்கி அயன்பாக் ஸோ, கட்டிலோ, தங்க காசோ பரிசாக கிடைப்பதை பெருமையாக கருதுகின்றனர் இளைஞர்கள். இதனால் இந்தாண்டு பலர் மாடு பிடி வீரர்களாக மாறத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் காலம் காலமாக நடக் கும் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, கடந்த 2008-ம் ஆண்டு முதல் சோதனை காலம் தொடங்கியது. 2014-ல் நிரந்தரத் தடைவிதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். 2017-ல் நடந்த எழுச்சிகரமான போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு புதிய விடியலைத் தேடித் தந்தது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிபிறந்தது.

ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ஏறு தழுவல் போன்ற பல வடிவங்களில் காளைகள் களமாடின. ஜல்லிக்கட்டு வாசனையே அறியாத தமிழகத்தின் கடைக்கோடி நகரான தென்காசி, தொழில் நகரமான திருப்பூர் மட்டுமல்லாது நகரங்கள், பட்டித்தொட்டி கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டின.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டையும் பார்க்க வரும் கூட்டமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஆண்களை விடவும் பெண்களின் கூட்டமே அள்ளுகிறது. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தாண்டி சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அரு கே நடக்கும் அரளிப்பாறை மஞ்சுவிரட்டு பலரையும் கவர்ந்துள்ளது. இதைப் பார்க்க ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டதுதான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அரளிப்பாறை பாலதண்டாயுதபாணி கோயில் மாசிமகத் திருவிழாவில் ஆண்டுதோறும் நடக்கும் இந்த மஞ்சு விரட்டையும் திருவிழாவையும் பார்க்க வெளியூர்களில் வசிக்கும் ஊர்க்காரர்கள், உறவினர்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வருவார்கள். இவர்களைப் பொருத்தவரை இந்த மஞ்சுவிரட்டு ஒரு குடும்ப விழா போல.

தமிழ்நாட்டில் பெண்கள் அதிகளவு பார்த்து ரசித்த மஞ்சுவிரட்டு இந்த ஆண்டு நடந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டாகத்தான் இருக்கும். விளையாட் டுத் திடல் உள்ள அரவன் மலையே பார்வையாளர் மாடமாக மாறியிருந்தது. மலை முழுவதும் மனித தலையாகத்தான் இருந்தது. பார்வையாளர் கூட்டமும் அங்கு நடந்த மஞ்சு விரட்டும் இந்த ஆண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மஞ்சுவிரட்டு பார்க்க வந்தவர்களுக்கு அருகே உள்ள சிங்கமங்கலம்பட்டி, அரளிப்பட்டி மக்கள் பேதமின்றி அனைவரையும் வரவேற்று விருந்து வைத்து அசத்தியுள்ளனர்.

அதுபோல, சிவகங்கை கண்டுப்பட்டியில் புனித அந்தோனியார் கோயில் திருவிழாவில் மதபேதமின்றி அனைவரும் இணைந்து சமூக நல்லிணக்க மஞ்சுவிரட்டை நடத்தியுள்ளனர். அங் கும் பார்வையாளர்களுக்கு விருந்து உபசரணை வஞ்சனையின்றி நடந்துள் ளது.

இந்த ஆண்டு கிடைத்த பெரும் வரவேற்பு பற்றி தமிழ்நாடு வீர விளையாட்டு மீட்புக் கழக மாநிலத் தலைவர் ராஜேஷ் கூறும்போது, “கடந்த ஆண்டு 230 கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த ஆண்டு 500-க்கும் மேற்பட்ட இடங்களில் நடக்கிறது. மாணவர்கள் போராட்டத்துக்குப் பிறகு ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் மிகப் பெரிய வரவேற்பும், ரசிகர்களும் கிடைத்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 300-க்கும் மேற்பட்ட புதிய நபர்கள் ஜல்லிக்கட்டு காளைகள் வாங்கி போட்டிக்கு அனுப்பி உள்ளனர். கிராம நகர வித்தியாசம் இல்லாமல் படித்தவர்களும் இந்த விளையாட்டில் பங்கெடுப்பது ஜல்லிக்கட்டை பாதுகாப்பதற்கும் நமது பாரம்பரிய மாட்டினங்களை மீட்பதற்கும் வாய்ப்பாக அமையும்” என்கிறார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x