Last Updated : 23 Jan, 2018 11:08 AM

 

Published : 23 Jan 2018 11:08 AM
Last Updated : 23 Jan 2018 11:08 AM

திருக்குறள் பிரியர்

ருவர் 100 திருக்குறளை படித்து அதன்படி நடந்தாலே போதும். அவரை யாராலும் வீழ்த்தமுடியாத நிலைக்கு உயர்வார் என நம்பிக்கையுடன் கூறுகிறார் ஐபிஎஸ் அதிகாரி ரா.திருநாவுக்கரசு.

தேனி மாவட்டம், ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர் படித்ததெல்லாம் அரசு பள்ளியில்தான். சோழவந்தான் திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் இயற்பியல் பட்டமும், காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சியும் முடித்து, தந்தை விரும்பியதால் சட்டப்படிப்பையும் படித்து வைத்தார்.

படித்தது அறிவியல் என்றாலும் தமிழ் இலக்கியம் மீது ஈடுபாடு அதிகம். இளைஞர் நலத்துறை நடத்திய வினாடி வினா நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளராகச் சென்றவர், போட்டியாளர்களுக்கு தெரியாத கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்து அசத்தியுள்ளார். இன்றைய மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, ‘‘உங்கள் அறிவை ஏன் போட்டித் தேர்வுக்கு பயன்படுத்தக் கூடாது?’’ என்ற கேட்ட பிறகுதான் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு தயாரானார் திருநாவுக்கரசு. 1999-ல் முதல் தேர்விலேயே தேர்ச்சி பெற, அதே ஆண்டில் டிஎஸ்பி.

வீரப்பன் தேடுதல் படலத்தில் 100 பேர் கொண்ட தனிப்படைக்கு தலைவராகவும், 7 ஆண்டுகள் வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படைப் பிரிவிலும் பணியாற்றியவருக்கு 2007-ல் முதல்வர் கையால் வீரதீர விருது கிடைத்தது. 2015-ல் ஐபிஎஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

மேடைப்பேச்சாளர், எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பணியில் சேர்ந்த காலம் முதல் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் உரையாற்றியுள்ளார்.

2013-ல் அவர் எழுதிய ‘உன்னுள் யுத்தம் செய்’ என்ற புத்தகம் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘கேளிக்கைகளில் நேரத்தை வீணடித்து லட்சியப் பாதையில் இருந்து விலகும் மாணவர்கள், இளைஞர்களுக்காக எழுதப்பட்ட நூல் இது. திருக்குறளோடு தன்னம்பிக்கை கதைகளை சொல்லும் விதமாக ‘ஒரு குறள் ஒரு பொருள்’ எனும் தலைப்பில் மற்றொரு புத்தகம் எழுதி வருகிறேன்’’ என்றார்.

தற்போது, சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக பணியாற்றி வரும் அவர், தினமும் காலையில் பணிக்கு வந்தவுடன் போலீஸாரை அழைத்து அவர்களுக்கு தினமும் ஒரு திருக்குறளை தமிழ், ஆங்கிலத்தில் சொல்லி நடைமுறை வாழ்க்கையோடு கற்றுக் கொடுக்கிறார். வாட்ஸ்அப்பையும் விட்டுவைக்காமல் அதன்மூலமாகவும் திருக்குறளை பரப்பி வருகிறார்.

மாதம்தோறும் ஏதாவது ஒரு பகுதிக்கு குடும்பத்தோடு சென்று மரக்கன்று நடுவதை வழக்கமாக்கி இருக்கிறார். தனியாளாக இதுவரை 25,000 மரக்கன்றுகளையும், குழுவாகச் சேர்ந்து பல லட்சம் கன்றுகளையும் நட்டு வைத்திருக்கிறார்.

“வெளிமாநிலம், வெளி நாடு சென்றாலும் தமிழரின் மிகப்பெரிய அடையாளம் திருக்குறளும், திருவள்ளுவரும்தான். உலகமே போற்றும் பொக்கிஷம் நம்மிடம் இருப்பதால் அதை நாம் பின்பற்ற வேண்டியதும் அவசியம். ஒவ்வொரு தனிமனிதனும் வாழ்நாளில் 100 திருக்குறளையாவது படித்து அதன்படி நடந் தால் அவர்களை யாரா லும் வீழ்த்த முடியாது’’ என்கிறார் நம்பிக்கை பொங்க.

காக்கிச் சட்டைக்குள்ளும் கவிதை பேசும் மனசு இருக்கும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் இந்த திருக்குறள் பிரியர் திருநாவுக்கரசு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x