Published : 17 Sep 2022 05:05 PM
Last Updated : 17 Sep 2022 05:05 PM

ஓடிடி திரை அலசல் | JOGI - தீரா துயரங்களின் ஆறாத வடுக்களுடன் ஒரு ‘திகில்’ அனுபவம்

1984-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்களைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தி திரைப்படம் ஜோகி (JOGI).

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தஞ்சமடைந்த சீக்கிய பிரிவினைவாதிகளை சிறைபிடிக்கும் நோக்கில் இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கை ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் (Operation Blue star) கடந்த 1984-ம் ஆண்டில் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்டது. ராணுவ நடவடிக்கை பெற்றிருந்தாலும், இது உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் இடையே கிளர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தனர்.

இந்த ராணுவ நடவடிக்கை நடந்த 4 மாதங்களுக்குப் பின்னர், 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி இந்திரா காந்தி, தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது படுகொலையைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் நடந்தன. இதில் பல அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தச் செய்தியை படத்தின் துவக்கத்தில் ஒரு கார்டாக பயன்படுத்திவிட்டு, 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி காலை 9 மணி, டெல்லியில் சீக்கியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில், திரிலோக்புரியில் நாயகனின் குடும்பம் காலை உணவருந்திவிட்டு பரபரப்பு வேலைக்கு கிளம்பும் காட்சியில் இருந்து படத்தை தொடங்கியிருக்கிறார் இயக்குநர்.

கட்டவிழ்த்துவிடப்பட்ட இந்தக் கலவரக் கும்பலின் தாக்குதலில் இருந்து நாயகனும் அவரது குடும்பமும் திரிலோக்புரியின் 6-வது சந்தில் வசித்த மற்றவர்களும் தப்பித்தனரா? இல்லையா? - இதுதான் படத்தின் திரைக்கதை.

தில்ஜித் தோஷன், முகமது ஜீசன் அயூப், ஹிதேன் தேஜ்வனி, குமுத் மிஸ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்தை இயக்குநர் அலி அப்பாஸ் ஜபார் இயக்கியுள்ளார். கலவரக்காரர்களிடம் இருந்து உயிரை பாதுகாத்துக்க கொள்ள நடக்கும் போராட்டத்தின் சஸ்பென்ஸ் நிறைந்த காட்சிகள் பார்வையாளர்களுக்கு திகில் அனுபவத்தை தருகிறது. படத்தின் இரண்டாவது பாதி மெதுவாக நகர்ந்தாலும், கதையின் கருவும், கலவரக்காரர்களிடம் சிக்கிக் கொள்வார்களோ என்ற பதற்றமும் பார்வையாளர்களை படத்தை முழுமையாக பார்த்துவிட தூண்டுகிறது.

குருத்வாரா, பள்ளிவாசல், லாரி வரும் 3 இடங்களில் நிகழும் சஸ்பென்ஸ்கள் எளிதில் யூகிக்கக்கூடிய காட்சிகளாக இருந்தாலும், ரசிக்கும்படியாக உள்ளது. இறுதிக்காட்சிக்கு முன், நாயகனின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியைவைத்து ட்ரிக்கரை அழுத்துவதற்கு முன் வரும் குட்டி பிளாஷ்பேக் அளவிலான காதல் காட்சிகள் இந்தப் படத்திற்கு போதுமென்று நினைத்த இயக்குநரின் தைரியம் பாராட்டுக்குரியது.

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கலவரம், இந்து - முஸ்லிம் கலவரம் என பலவற்றை குறித்து பார்க்கவும், கேட்கவும் செய்திருப்போம். இந்தப் பிரச்சினைகளை முன்வைத்து பல திரைப்படங்களும் வந்துள்ளன. இந்தப் படத்தில், இயக்குநர் அலி அப்பாஸ் ஜபார், ஒரு விஷயத்தை ஆணித்தரமாக கூறியிருக்கிறார்.

சீக்கிய நண்பனும் அவனது குடும்பமும் இந்தக் கலவரத்தில் கொல்லப்படலாம் என்ற தகவல் தெரிந்ததும், இந்து - இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த ஜோகியின் நண்பர்கள் அவர்களுக்கு உதவுவதை இத்திரைப்படம் பேசுகிறது. இதன்மூலம் பிரிவினைவாதிகளும், கலவரக்காரர்களும் எல்லா மதங்களிலும் இருப்பதை போலவே, மாற்று மதத்தைச் சேர்ந்த தனது நண்பனோ, தெரிந்தவர்களோ பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்களும் எல்லா மதங்களிலும் இருக்கவே செய்கின்றனர். அதுபோன்ற மனிதர்களின் துணையோடுதான் இதுபோன்ற இக்கட்டான காலங்களை கடக்க முடியும் என்பது உறுதிபட உணர்வுபூர்வமாக பேசியுள்ளது இந்த ‘ஜோகி’ திரைப்படம்.

ஆர்ப்பாட்டங்களோ, அதிரடி சண்டைக்காட்சிகளோ இல்லாமல் நகரும் இந்தத் திரைப்படம், இந்தியாவில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த தீரா துயரத்தின் ஆறாத வடுக்களான உண்மைச் சம்பவத்தின் தழுவல் என்பதால், பார்வையாளர்களை கவரும். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் காணக் கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x