Published : 07 May 2024 02:46 PM
Last Updated : 07 May 2024 02:46 PM

மஞ்ஞும்மல் பாய்ஸ் - ரிப்பீட் மோடுக்கு உகந்த திரை அனுபவம் | ஓடிடி விரைவுப் பார்வை

சில திரைப்படங்கள் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்புத்தட்டாத திரைக்கதை அம்சம் கொண்டவை. கடைசிவரை நம்பிக்கையின் பிடியை தளர்த்த விடாமல் போராடுதலுக்கான உந்துதலையும் தரக்கூடியவை. அப்படியொரு படமான ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. படத்தை தமிழிலும் காண முடியும்.

பல்வேறு குடும்பப் பின்னணிகளைக் கொண்ட 10-க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டது ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ நண்பர்கள் குழு. இவர்கள் கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்ல திட்டமிடுகின்றனர். ஒருவழியாக டிரைவருடன் சேர்த்து 11 பேர் ஒரு குவாலிஸ் காரில் இடித்துப்பிடித்து உட்கார்ந்து கொண்டு பழநி வழியாக கொடைக்கானலை அடைகின்றனர். அங்குள்ள லேக், பூங்கா, பைன் மரக்காடுகள், வியூ பாய்ன்ட் என எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து ஊருக்கு கிளம்புகின்றனர். அப்போது நண்பர்களில் ஒருவன் குணா குகையை நினைவுபடுத்த அதையும் பார்த்துவிட்டுச் செல்ல முடிவாகிறது.

அங்கு வனத்துறை அனுமதித்த இடத்தைத் தாண்டி, தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு பயணித்து பரவசம் அடைகிறது மஞ்ஞும்மல் பாய்ஸ் குழு. அப்போது எதிர்பாராத விதமாக இக்குழுவைச் சேர்ந்த சுபாஷ் (ஸ்ரீநாத் பாஷி) குகையின் பாறை இடுக்கில் உள்ள ஒரு 900 அடி பள்ளத்தில் விழுந்து விடுகிறார். பின்னர் என்ன நடக்கிறது என்பது படத்தின் திரைக்கதை.

உண்மைச் சம்பவத்தை தழுவி உருவாகியிருக்கும் இப்படத்தை இயக்குநர் சிதம்பரம் எழுதி இயக்கியிருக்கிறார். கொண்டாட்டமும் கும்மாளமும் நிறைந்து கிடக்கும் நண்பர்கள் பட்டாளத்தின் நட்பு, சாத்தானின் சமையலறை (Devil's Kitchen - குணா குகையின் பழைய பெயர்) ஆழத்தைவிட ஆழமானது என நிறுவியிருக்கிறார் இயக்குநர்.

நிகழ்கால சம்பவத்துடன் தொடர்புப்படுத்த பயன்படுத்தப்பட்டிருக்கும் நண்பர்களின் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் உறுத்தலாக இல்லை.படத்தின் முதல் பாதியில் நம்மை ஒரு சுற்றுலா செல்வதற்காக மகிழ்ச்சியோடு தயார்படுத்த, இரண்டாம் பாதியில் எதிர்பாராத நேரத்தில் உருவாகும் இக்கட்டான சூழலை எதிர்கொள்ளும் மன உறுதியை தருகிறது.

ஸ்ரீநாத் பாஷி, சவுபின் ஷகிர் இருவரும் மீண்டும் ஒருமுறை தங்களது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். சைஜு காலித்தின் கேமிராவும் அஜயன் சலிஷேரியின் கலை இயக்கமும் பிரமிக்கச் செய்கிறது. எது உண்மையான குகை எது செட் என தெரியாத அளவுக்கு இருவரும் உழைத்திருக்கின்றனர். சஷின் ஷியாமின் பின்னணி இசையும் விவேக் ஹர்ஷனின் கட்ஸும் படத்தை விறுவிறுப்பாக்குகின்றன. டைட்டில் கார்டில் ‘குணா’ படத்துக்கும், இளையராஜாவுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

கமலின் ‘குணா’ படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலின் ஒருபகுதி ஒலிக்கப்படும் இடம்தான் படத்தின் மொத்த ஆன்மா. சிலிர்க்க வைக்கும் அந்த இடமும், அதற்கடுத்து சவுபின் ஷாயிரிடம் தாய் ஒருவர் நன்றி சொல்லும் இடமும் க்ளாஸ் ரகம்! ‘மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல... அதையும் தாண்டி புனிதமானது!’ என்று இந்தப் பாட்டில் வரும் இவ்வரிகள்தான் அந்தப் படத்தின் ஒட்டுமொத்த கதையின் அடிநாதம். 33 வருடங்கள் கழித்து அந்தப் பாடலைக் கேட்கும்போது அகமும் புறமும் ஈரம் கொள்கிறது.

மர்மங்களை மவுனித்துக் கொண்ட மலைப்பிரதேசத்தின் குகை ஒன்றில் இந்தப்பாடல் எடுக்கப்பட்டிருக்கும். பறவைகளின் கீச்சொலியும், பாறைகளின் இறுக்கமும், குகைகளின் இருண்மையும், அசைவற்றுக் கிடக்கும் மரங்களும், கிளைகளும், பாறைகளில் படிந்துக்கிடக்கும் பாசி போல அந்தப் பாடலும், அதில் வரும் வசனங்களும் காட்சிகளும் இன்றளவும் நம் நினைவுகளில் அப்பிக்கிடக்கிறது.

இத்தகைய தாக்கத்தின் நீட்சியான இயக்குநர் சிதம்பரத்தின் இந்த ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்' திரைப்படம் பார்வையாளர்களுக்கு நல்லவொரு திரையனுபவத்தைக் கொடுக்கிறது. அத்துடன் படத்தை திரையரங்குகளில் பார்த்தவர்களும் கூட மீண்டும் ஓடிடியில் ரிப்பீட் மோடில் குறிப்பிட்ட காட்சியை பார்த்தாலும் அந்த கூஸ்பம்ஸ் தருணம் என்பது எப்போதும் மறையாத சாகாவரம் பெற்றது. > விரிவான விமர்சனத்தை வாசிக்க: Manjummel Boys: Review | மலைகளின் இளவரசியும் மல்லு நண்பர்களின் த்ரில் அனுபவங்களும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x