Published : 16 Aug 2017 10:51 AM
Last Updated : 16 Aug 2017 10:51 AM
நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற தாமதம் இல்லாமல் விரைவான நீதி கிடைக்க உறுதியேற்போம் என சுதந்திர தின விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அவர் நேற்று தேசியக் கொடியேற்றி வைத்து சிஐஎஸ்எப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில் பேசிய தலைமை நீதிபதி, ‘‘நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவும், சேவை செய்யவும், நாட்டை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லவும் உறுதியேற்போம். ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க அரசியலமைப்புச் சட்டம் வழிவகை செய்துள்ளது. ஆனால் அந்த அடிப்படை உரிமைகளைப் பெறுவதில் பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன. அந்த தடைகளைக் களைந்து அனைவருக்கும் அடிப் படை உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல ஒவ்வொரு மனிதனின் கண்ணியமும், உரிமையும் காப்பாற்றப்பட வேண்டும். தனி மனித உரிமை, உணவு, உடை, உறைவிடம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றை பாதுகாப்பது நீதித்துறையின் முக்கியமான கடமை. நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற தாமதத்தைக் களைந்து அனைவருக்கும் விரைவான நீதி கிடைக்க உறுதியேற்போம்’ என்றார். பின்னர் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நீதிமன்ற ஊழியர்களின் குழந்தைகளுக்கு தலைமை நீதிபதி பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT