Published : 09 Jun 2019 12:00 AM
Last Updated : 09 Jun 2019 12:00 AM

மதுரையில் தேர்தலின்போது சம்பூரணம் உள்ளிட்ட 4 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற கோரிக்கை: சத்யபிரத சாஹுவிடம் வருவாய்த் துறை அலுவலர்கள் மனு

மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வட்டாட்சியர் சம்பூரணம் உள்ளிட்ட 4 பேர் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் மக்களவைத் தேர்தல் முடிந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியில் உள்ளவாக்கு எண்ணிக்கை மையத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகில் ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறை இருந்தது. அந்த அறையில் அனுமதியின்றி சென்று வட்டாட்சியர் சம்பூரணம் உள்ளிட்ட 4 பேர் ஆவணங்களை நகல் எடுத்ததாக மார்க்சிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து, அந்த 4 பேரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

தற்போது தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில், நேற்று முன்தினம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை சந்தித்த தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் சங்கங்களின் மாநில நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த ஏப்.18-ம் தேதி மக்களவைத் தேர்தல் முடிந்து மதுரைமருத்துவக் கல்லூரியில் வாக்குஇயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து ஏப்.20-ம் தேதி, மதுரை ஆட்சியர் உத்தரவுப்படி, மதுரை மேற்கு சட்டப்பேரவை பகுதிக்கு பொறுப்பாளராக இருந்தகலால்வரி உதவி ஆணையர் ஆவணங்கள் வைத்திருந்த ஸ்டோர்அறைக்குள் சென்று, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களது டைரி நகல்களை எடுத்துள்ளார். வழக்கமாக இரு நகல்கள் இருக்க வேண்டும். ஒரே ஒரு நகல் மட்டும் இருந்ததால் அவற்றை நகல் எடுத்துள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்டிராங் அறைகளைப்போல், ஸ்டோர் அறைகளும் பூட்டப்பட்டு, சீல் வைக்கப்பட்டு, கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் கண்காணிப்பில் இருத்தல் வேண்டும் என்று தேர்தல் ஆணையம் எவ்வித வழிகாட்டுதல்களையும் வழங்கவில்லை. இந்த அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் மற்றும் பொருட்களை முன்னேற்பாடாக வகைப்படுத்தி பிரித்து சீலீட்டு வைப்பதற்காக அவ்வறைக்கு அவ்வப்போது சென்று வருவது காலம் காலமாய் நடைமுறையில் இருந்து வருகிறது.

மேலும், வாக்குப்பதிவு முடிந்ததும் முகவர்களுக்கு படிவம் 17 சியின் பாகம்-1 நகல் வழங்கப்பட வேண்டும். வாக்குச்சாவடிகளில் நகல் எடுக்க இயலாத காரணத்தால் வழங்கப்படாமல இருந்ததால்,வாக்குப்பதிவு முடிந்து ஓரிரு நாட்கள் கழிந்த பின்னர், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் இந்த நகலை கேட்டுப் பெறுவார்கள்.

இந்த தகவல்கள் அப்போது புகார் அளித்தவர்களிடம் கூறப்படவில்லை. எனவே, மதுரை மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வட்டாட்சியர் சம்பூர்ணம் உள்ளிட்ட 4 பணியாளர்களின் தற்காலிக பணி நீக்கத்தை உடனடியாக திரும்ப பெற்று அவர்களுக்கு பணியிடம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x